கொழும்பு தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் இந்தியா : 400 மில்லியனை செலுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு : தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பு என்கிறது மத்திய வங்கி - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

கொழும்பு தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் இந்தியா : 400 மில்லியனை செலுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு : தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பு என்கிறது மத்திய வங்கி

(லியோ நிரோஷ தர்ஷன்)

அந்நிய செலாவணியை தக்கவைத்துக் கொள்வதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மீள செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கிழக்கு முனையம் விவகாரத்தில் ஏற்பட்ட இரு தரப்பு மனக்கசப்பினால் குறித்த தொகையை இந்தியா கோரியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய வங்கி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மேலும் இந்தியாவுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நெருக்கடியினால் இந்தியாவுடன் இலங்கை மனகசப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. 

கிழக்கு முனைய விவகாரத்தை நாட்டு மக்கள் மத்தியில் வீரச் செயலாக காண்பித்தாலும் இந்துமா சமுத்திர பிராந்தியத்தில் அநாவசியமான சிக்கலுக்குள் விழும் நிலையே ஏற்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பிப்பதையே விரும்புவதாக டெல்லி வலியுறுத்தியது.

குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தியில் பங்கெடுப்பது குறித்து இந்தியா இன்னும் தீர்மானிக்கவில்லை. 

எனவே ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கப்பட்டதாக இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்தியா வழங்கிய 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப் பெறுவது குறித்தும் இதன் போது இந்திய தரப்பில் கூறப்பட்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

ஆரம்பத்தில் சீனாவிடமே இத்தொகை கோரப்பட்டிருந்த நிலையில் டொலருக்கு பதிலாக யுவான் தருவதாக சீனா கூறிய நிலையிலேயே இந்தியாவின் பக்கம் இலங்கை திரும்பியது.

2020 ஜுலை மாதம் இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக 400 மில்லியன் டொலரை இந்தியா வழங்கியது. ஆனால் இந்த தொகையை மீள செலுத்த நீண்ட காலம் வழங்கப்படும் என இலங்கை எதிர்பார்த்தது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு முனைய ஒப்பந்தம் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இந்தியா அதிருப்தியை பல வழிகளில் வெளிப்படுத்தியது. அதில் ஒன்றாகவே இந்த 400 மில்லியன் விவகாரம் அமைந்திருப்பதாக இராஜதந்திர செய்திகள் குறிப்பிடுகின்றன.

கிழக்கு முனையத்தின் செயற்பாட்டு அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்தின் 49 வீத பங்குகளை இந்தியா வைத்திருப்பதுடன் எஞ்சிய 59 வீதமான பங்குகள் இலங்கைக்கு உரித்துடையது என ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஆனால் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக இலங்கை அறிவித்ததுடன் 100 வீதமான உரிமத்தை இலங்கை கொண்டிருக்குமென குறிப்பிட்ட நிலையில் கடும் அதிருப்பியை இந்தியா வெளியிட்டது.

முத்தரப்பு ஒப்பந்தத்தின் மற்றத்தரப்பான ஜப்பானும் இந்த விடயத்திற்கு அதிருப்பயை வெளியிட்டுள்ளதுடன் ஒருதலைப்பட்சமான செயற்பாடு என குறிப்பிட்டுள்ளது. 

இவ்வாறானதொரு நிலையிலேயே இலங்கை மத்திய வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீள செலுத்தி விட்டதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment