அரசாங்கத்தின் மேற்கு முனைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கிழக்கு முனைய நாடகம் அரங்கேற்றப்பட்டது - ஹெக்டர் அப்புஹாமி - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

அரசாங்கத்தின் மேற்கு முனைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கிழக்கு முனைய நாடகம் அரங்கேற்றப்பட்டது - ஹெக்டர் அப்புஹாமி

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திலேயே மேற்கு முனையம் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கிழக்கு முனைய நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தில் ஆளுந்தரப்பினரே பிரதான கதாபாத்திரங்களாவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திலேயே மேற்கு முனையம் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கிழக்கு முனைய நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதன் பிரதிபலனாக மேற்கு முனையத்தின் 85 வீதம் அந்நியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில போன்றோர் உண்மையில் நாட்டை நேசிப்பவர்களாயின் மேற்கு முனையம் தூத்துக்குடிக்குரியதா என்று கேட்க விரும்புகின்றேன். இறுதியில் கொழும்பு துறைமுகத்திற்கு அதானி என்று பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களை விட வெளிநாட்டவர்களுக்கு குறைந்தளவான கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகளும் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறிருக்க பங்கு சந்தை என்றுமில்லாதவாறு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று கூறினார். அதற்கு எதிராக பலர் தற்போது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவையும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா?

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினாலும், கொழும்பு துறைமுகத்தின் சகல முனையங்களும் தற்போதைய அரசாங்கத்தினாலேயே வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இதில் வேறு எந்த கட்சிக்கோ அல்லது முன்னைய ஆட்சியாளர்களுக்கோ எவ்வித தொடர்பும் கிடையாது. எனவே இதற்கு முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். மக்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment