(இராஜதுரை ஹஷான்)
மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலும், களுத்துறை மாவட்டத்திலும் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட பிரதேச தொடர்பு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இவ்விடயத்தை செயற்படுத்த சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை கோரியுள்ளோம். கொழும்பு மாவட்டம் தொடர்பிலான தீர்மானம் இவ்வாரம் பிரதேச தொடர்பு குழுவினால் கூடி எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை முழுமையாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதற்கு சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேல் மாகணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் முதலாம் தவனை கற்றல் நடவடிக்கைகள் வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளன. இதற்கமைய கடந்த வாரம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை 67 சதவீதமாகவும், ஆசிரியர்களின் வருகை 88 சதவீதமாகவும் பதிவாகியுள்ளன.
எதிர்வரும மாதம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் மேல் மாகணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சிறந்த முறையில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களும், ஆசிரியர்களும் பொறுப்புடன் பாடசாலைக்கு வருகை தருகின்றமை வரவேற்கத்தக்கது.
கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக பிரதேச தொடர்பு குழுவினர் கல்வி அமைச்சுக்கு யோசனை முன்வைத்துள்ளார்கள்.
இவர்களின் யோசனையை செயற்படுத்த சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது. பிரதேச தொடர்பு குழுவில் பாடசாலை அதிபர், கிராம சேவகர். வலய கல்வி பணிப்பாளர், பிரதேச சுகாதார சேவைஅதிகாரி,உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் பங்குப்பற்றுகிறார்கள்.
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களுக்குட்பட்ட 590 பாடசாலைகள் உள்ளன. கம்பஹா கல்வி வலயத்தில் 154 பாடசாலைகளும், 27 பிரிவெனா பாடசாலைகளும், களனி கல்வி வலயத்தில் 115 பாடசாலைகளும், மீகமுவ கல்வி வலயத்தில் 135 பாடசாலைகளும், மினுவாங்கொட கல்வி வலயத்தில் 159 பாடசாலைகளும் உள்ளன. மினுவர்ஙகொட கல்வி வலயத்தில் உள்ள கல்லொலுவ அல்-அமான் மகா வித்தியாலயத்தை தவிர ஏனைய பாடசாலைகளை திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக கொண்ட பாடசாலைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய வகுப்பினை இரண்டாக பிரித்துக் கொள்ள முடியும். இடப்பற்றாக்குறை காணப்படுமாயின் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைக்கு ஒரு தரப்பு மாணவர்களையும், வியாழன், வெள்ளி தேவையாயின சனி ஆகிய கிழமைக்கு பிறிதொரு தரப்பு மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்க முடியும். இதனை பாடசாலை நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்.
களுத்துறை மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தில் 446 பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் 442 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மூன்று கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. மதுகம கல்வி வலயத்தில் 131 பாடசாலைகள் காணப்படுகின்றன.
மதுகம நகரில் ஒரு தேசிய பாடசாலை உள்ளன. இப்பாடசாலையில் அதிக மாணவர்கள் கல்வி கற்பதால் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் போது விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும் அத்துடன அகலவத்தை தொகுதியில் உள்ள 16 பாடசாலைகளில் 5 பாடசாலைகளுககு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
களுத்துறை கல்வி வலயத்தில் 161 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 4 பாடசாலைகளை தவிர ஏனைய 167 பாடசாலைகளை திறக்க முடியும். 4 பாடசாலைகளை 15 ஆம் திகதி திறக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது. என களுத்துறை கல்வி வலய காரியாலயம் குறிப்பிட்டது.
ஹொரனை கல்வி வலயத்தில் 138 பாடசாலைகளும், 16 பிரிவெனாக்களும் உள்ளன இப்பாடசாலைகள் அனைத்தையும் திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க முடியும் என பிரதேச தொடர்பு குழு முன்வைத்துள்ள யோசனையை செயற்படுத்த சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி அவசியம். இவ்விடயம் குறித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பது குறித்து பிரதேச தொடர்பு குழுவினர் இவ்வாரம் கூடி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர் அத்தீர்மானம் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும். மேல் மாகணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் வெகுவிரைவாக திறக்க உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மற்றும். கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பது குறித்து பாடசாலை அதிபர்களிடமும் 11 வலய கல்வி பணிப்பாளர்களிடமும், 38 கோட்ட கல்வி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம்.என்றார்.
No comments:
Post a Comment