நிர்வாணமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்து பணம், நகைகளைக் கொள்ளையிட்டு வந்த இராணுவத்திலிருந்து விலகியிருந்த நபர் ஒருவரை திருடப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளுடன் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் வில்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவராவார்.
நிர்வாணமாக யாரோ ஒருவர் வென்னப்புவ தும்மலதெனிய பிரதேச வீடுகளுக்குள் நுழையும் காட்சிகள் சீசீடிவி கெமராக்களில் பதிவாயிருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் முன்னெடுத்த நடவடிக்கையின் போதே இவ்வாறு இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவு வேளையில் சந்தேகநபர் வீடுகளில் நடமாடுவதாக பரவிய கதையினை அடுத்து அநேக வீட்டு உரிமையாளர்கள் அச்சத்திற்கு உள்ளாகி விடிய விடியவிடிய நித்திரை முழித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரைக் கைது செய்வதற்காக வென்னப்புவ பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையின் கீழ் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் மறைந்திருந்து இரவு மற்றும் அதிகாலை வேளையில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கிடமானவர்களை நிறுத்தி சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் விசேட நிருபர்
No comments:
Post a Comment