மருதனார் மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார் மடம் பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகார பிரிவினருடன் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருதனார் மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருதனார் மட சந்தை வியாபாரிகள் 422 பேரை அவர்களின் குடும்பங்களுடன் சுய தனிமைப்படுத்தியுள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வேலைக்கோ, பாடசாலைக்கோ செல்ல முடியாது.
அடையாளம் காணப்பட்ட 39 தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களை இனங்கண்டு அவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்கிறோம்.
மேலும் தமது நாளாந்த தேவைகளுக்காக உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் மட்டுமன்றி ஏனையோரும் மருதனார் மடம் பொதுச் சந்தைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும்.
எனவே கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார் மடம் பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகார பிரிவினருடன் (சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்) அல்லது கிராம சேவை உத்தியோகத்தரிடம் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிப்பதுடன், சமூகத் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையும் செய்துகொள்ள முடியும்.
அவ்வாறு தகவல் வழங்குவதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர அழைப்பெண்ணான 012 2226666 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்கள் சந்தேகங்களுக்குரிய விபரங்களை தெரியப்படுத்துவீர்களாயின் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment