இரத்தத்தைப் பார்க்க தூண்டும் மாத்திரை சிறைச்சாலைக்குள் எவ்வாறு சென்றது? - இந்த அரசாங்கத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதுடன் ஜனநாயகமும் கேள்விக்குரியாகியுள்ளது : ஹெக்டர் அப்புஹாமி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

இரத்தத்தைப் பார்க்க தூண்டும் மாத்திரை சிறைச்சாலைக்குள் எவ்வாறு சென்றது? - இந்த அரசாங்கத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதுடன் ஜனநாயகமும் கேள்விக்குரியாகியுள்ளது : ஹெக்டர் அப்புஹாமி

(எம்.மனோசித்ரா)

இரத்தத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் மாத்திரை சிறைச்சாலைக்குள் எவ்வாறு சென்றது? இவ்வாறான மாத்திரை தொடர்பில் அறிந்திருந்த அமைச்சர் அல்லது அவரது ஆதரவாளர்களா இதனை கைதிகளுக்கு வழங்கினார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெறும் சம்பவங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பதை தெளிவாக்கியுள்ளது. மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் நாட்டிலுள்ள அனைவருக்கும் சிறந்த பாடமாகும். இது மஹர சிறைச்சாலைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பிரச்சினையல்ல. மாறாக முழு நாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பிரச்சினையாகும்.

சிறைச்சாலைகளில் சந்தேகநபர் மற்றும் குற்றவாளிகள் என இரு பிரிவினர் உள்ளனர். இந்த பிரிவினருமே நம் நாட்டு பிரஜைகள் என்பதை மறுக்க முடியாது. சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக குறிப்பிட்டவொரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இவர்கள் இருப்பதால் தமக்கு தேவையானவற்றை பிறர் செய்து கொடுத்தால் மாத்திரமே அவர்களால் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் காரணமாகவே அவர்கள் சிறைச்சாலைக்குள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பேணுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம், சிறைச்சாலைகளில் 10 பேர் மாத்திரமே இருக்கக் கூடிய இடங்களில் 25 பேரை வைத்திருக்கிறது. இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக கைதிகள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அது அவர்களின் உரிமையாகும்.

இது இவ்வாறிருக்க அமைச்சரவை அமைச்சரொருவர், மஹர சிறையில் இடம்பெற்றது திட்டமிட்ட சதி என்றும், ஒரு வகை மாத்திரையை உட்கொண்டால் இரத்தத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதன் விளைவே மஹர சிறையில் இடம்பெற்ற சம்பவம் என்றும் கூறுகின்றார்.

அவ்வாறெனில் இவ்வாறானதொரு அபாயகரமாக மாத்திரை குறித்து அமைச்சர் முன்னரே அறிந்து வைத்திருந்தாரா ? அந்த மாத்திரை எவ்வாறு சிறைச்சாலைக்குள் சென்றது? அமைச்சரால் வழங்கப்பட்டதா அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்டதா? இவ்வாறான மாத்திரை மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க சர்வதேச மட்டத்தில் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைச்சர் கூறுகிறார். அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டத்தை முன்னெடுக்கும் அந்த குழு எது? இவை வெறும் நகைச்சுவைப் பேச்சுக்களாகும்.

மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்த ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழுவிற்கு முன்னராகவே அமைச்சரவை அமைச்சரால் இவ்வாறான தகவல்கள் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டு விட்டன.

கொவிட் இரண்டாம் அலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்குள்ளாகி, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததன் பின்னர் கொவிட் தடுப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சி காணப்பட்டாலும் அவருக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை. மாறாக அமைச்சரவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மாத்திரமே அவரது கடமையாகவுள்ளது.

இது போன்ற அரசியல் விவகாரங்கள் மாத்திரமின்றி நாட்டில் போக்குவரத்து, கல்வி மற்றும் பொருளாதாரம் என அனைத்து விடயங்களும் சீரழிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு 10,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாகக் கூறிக் கொண்டு 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவையும் 5,000 பெறுமதியான பொருட்களையும் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதுடன் ஜனநாயகமும் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. சர்வாதிகார ஆட்சியே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஹிட்லர் அல்லது இடியமின் பின்பற்றிய வழிமுறையா? இது போன்ற சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களின் எதிர்க்கட்சியாக நாம் எப்போதும் குரல் கொடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment