கொரோனாத் தொற்று சமூக மட்டத்தில் பரவும்போது கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 30 சதவீதத்தினர் நோய் அறிகுறியற்றவர்களாகக் காணப்படுவர். ஒருவரின் உடலில் நோய்க்கிருமித் தொற்று இருப்பின் மூன்று கிழமை வரை ஏனையவர்களுக்குத் தொற்ற வாய்ப்பு உள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாத் தொற்றுத் தொடர்பாக நோய் அறிகுறி, தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். சமூகத்தில் எழுந்தமானமாக யாரிடமும் பரிசோதனை மேற்கொள்ள முன் அந்நபரிடமிருந்து எழுத்துமூல அனுமதி பெறப்படல் வேண்டும்.
மேலும் கொரோனா ஆய்வுகூட முடிவுகள் கூறுவதற்கு முன் தனி மனித ஆற்றுப்படுத்தலும் குடும்ப ஆற்றுப்படுத்தலும் வழங்கப்படல் வேண்டும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலில் கொரோனா கட்டுப்பாட்டில் மனித உரிமை அணுகு முறையினைக் கடைப்பிடிக்க முன்னுரிமை அளிக்கும். நோயாளி தொடர்பான தகவல்களை விளம்பரப்படுத்தல் தவறானது. மாறாக இராணுவ எதேச்சாதிகார ரீதியிலான கொரோனாக் கட்டுப்பாடு வெறும் புள்ளிவிவரங்களுடன் மட்டும் நிற்கும். எனவே நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலேயே கொரோனாத் தடுப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.
இன்று இலங்கையில் சுமார் 33 ஆயிரம் பேர் கொரோனாத் தொற்றுடைய நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். எனவே சுமார் 9 ஆயிரத்து 600 பேர் கொரோனாத் தொற்றுடன் அறிகுறி இல்லாது சமூகத்தில் காணப்படலாம்.
ஆற்று நீரின் வெள்ளத்தினை அளவிடுவது போன்றே கொரோனா தொற்றின் அளவினைக் கண்டறியும் பரிசோதனை முடிவுகள் ஆறு பெருக்கெடுத்து ஓடும்போது அதன் வெள்ளத்தை அளவிடுவது மடமையாகும். மாறாக வெள்ளத்தை தடுத்தல், வெள்ளப் பாதிப்பைக் குறைத்தல் என்பனவே செய்தல் அவசியமாகும்.
அதேபோல் தற்போதைய சூழலிலும் கொரோனா நோயாளிகள் அடையாளப்படுவதனை எண்ணிக்கையில் மட்டும் கருத்தில் கொள்ளாது, கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கும் செய்ய வேண்டிய முற்காப்புக்களை ஒவ்வொருவரும் தனி மனிதர்களாகச் செய்ய வேண்டும்.
கொரோனா நோய்கான பிரத்தியேகச் சிகிச்சை இல்லாத சூழலில் ஒருவரைக் கட்டாயப்படுத்தி கொரோனா நோய் பரிசோதனைக்கு உட்படுத்தல் மனித உரிமை ரீதியில் சரியானதல்ல. அதேபோல் இறந்த ஒருவரின் உடலில் கொரோனா நோய்கிருமியின் தொற்றும் தன்மையைவிட நோய் அறிகுறி காட்டாது.
கொரோனா வைரஸ் தொற்றுடைய நபர், சமூகத்தில் நோயினைப் பரப்புவர். எனவே இறந்த கொரோனா வைரஸ் தொற்றுடையவரின் உடலை புதைத்தல், உயிருள்ள கொரோனா தொற்று நோயாளரை நடமாடலை விட ஆபத்தானதல்ல. அதாவது இறந்த உடல்களை புதைத்தல் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நோய் அறிகுறிகள் இல்லாதபோது சமூகத்தில் நடமாடுதலைவிட ஆபத்தானதல்ல.
கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்பாட்டில் மனித உரிமை அணுகலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும். தனி மனித உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும். சிறுபான்மையினர், மத ரீதியாகத் துன்புறுத்தப்படல் தவிர்க்கப்படல் வேண்டும். இன, மத, பிரதேச ரீதியாக நோயாளர்களை வதைப்படுத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளையே பின்பற்றுதல் வேண்டும். காச நோய்க் கட்டுப்பாட்டிற்கான சமூக அணுகல் கொரோனா வைரஸ் நோய்க் கட்டுப்பாட்டிலும் பயன்படும். காச நோய் ஒருவரில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட கொரோனா வைரஸ் தொற்று ஒருவரில் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் குறைவு.
அதிகாரிகள் கொரோனா பரவலைச் சாதகமாக வைத்து மக்களின் சமூக விழுமியங்களை மிதிக்க முற்படுவதும் மக்களை அடக்க முயல்வதும் தவறானது.
No comments:
Post a Comment