அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கமலா ஹாரிஸூம் 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.
சுகாதார பணியின் முன்கள பணியாளர்கள், தேசிய தொற்று நோயியல் அமைப்பின் இயக்குனர் அந்தோணி பயூசி மற்றும் ஜனாதிபதி டிரம்ப் ஆகிய மற்ற 3 போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று டைம் இதழ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டைம் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் கதையை மாற்றியமைத்து, பிரிவினைவாதத்தை விட அன்பிற்குதான் அதிக சக்தி என்பதை எடுத்துரைத்ததற்காகவும், உலகில் பிரச்சினையை தீர்க்க கருணை அவசியம் என்பதை உணர்த்தியதற்காகவும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இந்த ஆண்டு சிறந்த நபர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்டுள்ள டைம் இதழ், அமெரிக்காவின் கதை மாறுகிறது என்று தலைப்பிட்டுள்ளது.
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம் இதழின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1927 ஆம் ஆண்டு தொடக்கம் செய்திகளில் அதிகம் பேசப்படுவோரை தேர்வு செய்து டைம் இதழ் ஆண்டின் சிறந்தவர்களாக கௌரவித்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், அவர் வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment