தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 459 குடும்பங்களைச் சேர்ந்த 1,589 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு வேலணை பகுதியைச் சேர்ந்த 2 பேர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 141 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment