யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 10 தேசிய பாடசாலைகள் - முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் அமைக்கப்படும் : அங்கஜன் உறுதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 10 தேசிய பாடசாலைகள் - முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் அமைக்கப்படும் : அங்கஜன் உறுதி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

2021 ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் எட்டு பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுமென தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான இராமநாதன் அங்கஜன். முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

இலங்கையில் முன்பள்ளிக் கல்வி தொடர்பில் எந்தவொரு அரசும் இதுவரை கவனம் செலுத்தாத நிலையில் எமது அரசு முன்பள்ளிக் கல்வியை அரச கட்டமைப்புக்குள் உள்ளீர்த்து, நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரச நியமனங்களை வழங்குவதுடன் நிரந்தர சம்பளத்தையும் வழங்க வேண்டுமென அரசிடம் கோருகின்றேன். 

இதேவேளை நாட்டில் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2021ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் எட்டு பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும். அதேவேளை யாழ் தீவகப்பகுதி மற்றும் கிளிநொச்சியிலுள்ள கஷ்டப்பிரதேசங்களையும் கல்வி அமைச்சு கவனத்தில் எடுக்க வேண்டும்.

அத்துடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளது. அத்துடன் பத்து நகர பல்கலைக்கழகங்களையும் அமைக்கவுள்ளது. இதில் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும், இன்னொன்று நுவரெலியா மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன. 

இதேவேளை இலங்கை பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலில் யாழ் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்துடன் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி, சித்த மருத்துவ பிரிவு ஆகியவற்றை பீடங்களாக்க வேண்டுமென்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன். அதேபோன்று உடற்கல்வி பட்டப்படிப்பையும் ஆரம்பிக்க வேண்டுமெனவும் கோருகின்றேன். 

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் நடத்தப்படும் எல்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ''ஜப்னா ஸ்ரான்லியன்ஸ்'' என்ற அணி உருவாக்கப்பட்டமைக்கும் அந்த அணியில் வடக்கு மாகாண வீரர்கள் உள்வாங்கப்பட்டமைக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் இது வடக்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் செயற்பாடு என்றார்.

No comments:

Post a Comment