கொவிட்-19 வைரஸ் தொற்று இரண்டாவது முறை தாக்கப்பட்ட வயது முதிர்ந்த நெதர்லாந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாவது இது முதல்முறை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த வைரஸ் தொற்றில் இருந்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி எத்தனை காலம் நீடிக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முதல் முறை வைரஸ் தொற்றுக்கு பின்னர் 59 நாட்களில் அவர் உயிரிழந்திருப்பதாக இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சஞ்சிகையில் இது பற்றி வெளியாகியுள்ளது.
89 வயதான அந்தப் பெண் அரிதான நோய் ஒன்றினாலும் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் இரண்டாவது முறை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு முறை ஏற்பட்ட கொரோனா பாதிப்புக் குறித்து ஆய்வு செய்திருக்கும் ஆய்வாளர்கள், இந்த இரண்டு சந்தர்ப்பத்திலும் வைரஸ் மரபணு அமைப்பில் மாறுபாடு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது முறை ஏற்பட்ட 23 சம்பவங்கள் உலகெங்கும் பதிவாகி இருந்தபோதும் அந்த அனைத்து நோயாளிகளும் பூரண குணமடைந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment