(நா.தனுஜா)
மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தில் ஒருபோதும் கைச்சாத்திட மாட்டோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது அதில் கைச்சாத்திடுவதற்கு உடன்பட்டிருக்கிறது. நாட்டில் பாராளுமன்றம் இல்லாத சூழ்நிலையில் அதன் அனுமதியின்றி இரகசியமாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதே அரசாங்கத்தின் திட்டமாகும். அதுமாத்திரமன்றி தேர்தலின் பின்னர் 'எத்தகைய நிபந்தனைகளையும்' ஏற்றுக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெறுவதற்கும் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இணங்கியிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என்று கூறியே தேர்தலில் போட்டியிட்டார்கள். உண்மையில் இத்தகைய உடன்படிக்கைககளில் கைச்சாத்திடுவதா, இல்லையா என்பதைப் பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். ஆனால் இப்போது பாராளுமன்றம் இல்லாத சூழ்நிலையில் இதில் இரகசியமாகக் கைச்சாத்திடுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதுமாத்திரமன்றி தேர்தலின் பின்னர் எந்தவொரு நிபந்தனையையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்து சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களையும் அரசாங்கம் நடத்தியிருக்கிறது.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாத பொதுஜன பெரமுன அரசாங்கம் 'டைட்டானிக்' கப்பலைப் போன்று எமது நாட்டை முழுவதுமாக மூழ்கடிக்கப்போகின்றது. அதேபோன்று மிலேனிம் சலென்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்போகின்றது. இந்த அரசாங்கத்திற்கு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கோ திறனில்லை. உலகளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் ஏனைய நாடுகள் தமது பொருளாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனினும் எமது அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. இது தற்போது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட பொருளாதார இயலுமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நெருக்கடி நிலையின் காரணமாக எமது நாடு 7000 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்திருக்கிறது. ஆடை ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவோரின் பணம் அனுப்புதல்கள் மூலமாக இதுவரை காலமும் நாடு பெற்றுக்கொண்ட வருமானம் இப்போது இல்லாமல் போயிருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் இறக்குமதிகளை இடைநிறுத்தியிருக்கிறது. எமது நாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. எனினும் அவற்றைப் பொதி செய்வதற்கான பொருட்கள் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இறக்குமதியை நிறுத்துவதனால் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
இன்றளவில் எமது நாட்டிற்கு நிதியுதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. சிறிய நாடுகளுக்கு நிதியுதவிகளை வழங்குகின்ற பொறுப்பை அபிவிருத்தியடைந்த வளம் மிக்க நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கின. அதன்படி பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் மியன்மார் போன்ற நாடுகளுக்கு நிதியளிக்கப்பட்டது. எனினும் தெளிவற்ற கொள்கையின் காரணமாக இலங்கையினால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் எம்மிடம் நாட்டைக் கையளித்தால் முறையான கொள்கையின் ஊடாக இந்த நிதியுதவியை நாம் பெற்றுக்கொள்ளுவோம்.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கான அரசாங்கத்திற்கு வழிவகைகள் எதுவும் தெரியவில்லை. அதற்கான தற்போது அமெரிக்க மத்திய வங்கியில் கடன் பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவிலுள்ள எமது நாட்டின் பிணைமுறிகளை அந்த அரசாங்கத்திடம் கையளிக்கும் பட்சத்திலேயே அமெரிக்க மத்திய வங்கியிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ள முடியும். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்காக அமெரிக்க மத்திய வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களைக் கோரியிருப்பதாக அரச திறைசேரியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். எனினும் இவற்றை மீளச்செலுத்துவதற்கு எம்மிடம் நிதியில்லை. அவ்வாறு மீளச்செலுத்தாத பட்சத்தில் அதற்குப் பதிலீடாக வைக்கப்பட்ட பிணைமுறிகளை அமெரிக்க அரசாங்கம் உடைமையாக்கிக்கொள்ளும்.
அதுமாத்திரமன்றி தற்போது அரசாங்கம் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் இணங்கியிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என்று கூறியே தேர்தலில் போட்டியிட்டார்கள். உண்மையில் இத்தகைய உடன்படிக்கைககளில் கைச்சாத்திடுவதா, இல்லையா என்பதைப் பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். ஆனால் இப்போது பாராளுமன்றம் இல்லாத சூழ்நிலையில் இதில் இரகசியமாகக் கைச்சாத்திடுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது.
அதுமாத்திரமன்றி தேர்தலின் பின்னர் எந்தவொரு நிபந்தனையையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்து சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களையும் அரசாங்கம் நடத்தியிருக்கிறது. இவையனைத்தும் உண்மை என்பதனாலேயே அரசாங்கம் இதனை மறுத்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஆனால் நாட்டின் உடைமைகளை வெளிநாடுகளிடம் பதிலீடாகக் கையளிக்காமல் நிதியைப் பெற்றுக்கொள்ளும் இயலுமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே இருக்கிறது. ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
No comments:
Post a Comment