(இராஜதுரைஷாஹன்)
பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கு தடைகள் ஏதும் இனி கிடையாது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு ஓரிரு வாரங்களில் தனது கடமையினை முழுமைப்படுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கு எதிர்த்தரப்பினர் முன்னெடுத்த முயற்சிகள் ஜனநாயக முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவலை காரணம் காட்டி இவர்கள் தங்களின் கட்சி உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்தார்கள். நெருக்கடியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல.
நீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடர்ந்து பொதுத் தேர்தலை விரைவாக நடத்தும் நடவடிக்கையினை தேர்தல்கள் ஆணைக்கு எடுக்க வேண்டும். இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கு இனி தடையேதும் கிடையாது. தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் உரிய ஒத்துழைப்பினை வழங்கும். எந்நிலையிலும் சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment