ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகளுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதனையும் விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 18 ஆம் திகதி முதல் 10 நாட்களாக எடுக்கப்பட்ட குறித்த மனுக்களின் பரிசீலனை நேற்றையதினம் (01) நிறைவடைந்ததை அடுத்து, இன்று (02) பிற்பகல் 3.00 மணிக்கு கூடிய உச்சநீதிமன்றம் இம்முடிவை அறிவித்துள்ளது.
இதன்போது, மனுத்தாக்கல் செய்த தரப்பினரும், இடையீட்டாளர்களும் இன்று மன்றின் வளாகத்தில் ஆஜராகியிருந்தனர்.
நிறைவேற்று ஜனாதிபதி எனும் வகையில், ஜனாதிபதியின் நடவடிக்கைகள் முறையானவை என, இவ்வுத்தரவின் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நாளை (03) இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தை அடுத்து, பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment