குவைத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் குறித்து மஹிந்தானந்த தெரிவித்துள்ள கருத்து கவலைக்குரியது - ஹந்துனெத்தி வெளிநாட்டமைச்சருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

குவைத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் குறித்து மஹிந்தானந்த தெரிவித்துள்ள கருத்து கவலைக்குரியது - ஹந்துனெத்தி வெளிநாட்டமைச்சருக்கு கடிதம்

(எம்.மனோசித்ரா) 

குவைத்திலிருந்து இம்மாதம் 19 ஆம் திகதி இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமையானது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு சமமானது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ள கருத்து கவலைக்குரியது என்று தெரிவித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு அக்கரையில் நாம் அமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கடிதம் அனுப்பி வைத்துள்ளார். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்களை அவமதிக்கும் வகையிலும் பொறுப்பற்ற வகையிலும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே சுனில் ஹந்துனெத்தி இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளார். 

இம்மாதம் 19 ஆம் திகதி குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள உண்மைக்கு புறம்பான செய்திகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது. 

குவைத்திலிருந்து இலங்கைக்கு இம்மாதம் 19 ஆம் திகதி வருகை தந்த இலங்கையர்கள் குவைத் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்றும் அவர்களுடைய வருகையானது இலங்கைக்கு குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு ஈடானது என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கடந்த 25 ஆம் திகதி தெரிவித்த கருத்து கவலைக்குரியதாகும். 

அத்தோடு அந்த சந்தர்ப்பத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பல அடிப்படையற்ற போலியான குற்றச்சாட்டுக்களாகும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். 

குறிப்பாக இவ்வாறு குவைத்திலிருந்து வந்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் என்றும் குறித்த நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். 

குறித்த 467 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் நால்வர் வைத்தி நலன்கள் ஆராயப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த நால்வரில் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குவைத்துக்கான இலங்கை தூதுவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் தம்மை நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது நீங்கள் அறிந்த விடயமாகும். 

எனினும் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கத்தால் தயக்கம் காண்பிக்கப்பட்டமையால் தற்போது இவ்வாறான தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வெளிநாட்டு அரசாங்கங்களை விமர்சிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இவ்வாறான நிலையில் வெவ்வேறு நாடுகளிலும் சிக்கித் தவிக்கின்ற இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதை நிறுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது. 

எனவே அக்கரையில் நாம் அமைப்பினால் குவைத் கிளைக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவுபடுத்தல் உங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு அரசாங்கமும் தயாராகவுள்ளதாகவும் அந்த பொறுப்பை கைவிட்டு பாதிக்கப்பட்டுள்ள பிரஜைகள் மற்றும் அவர்களை இலங்கைக்கு அழைத்து வருதல் என்பவற்றுக்காக வெவ்வேறு ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற அரசாங்கங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு நாம் அதிருப்தி தெரிவிக்கின்றோம். 

மிகுந்த உடல் நலத்துடனேயே மேற்கூறப்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வந்தனர். எனினும் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணிகளினாலேயே அந்த அரசாங்கங்கள் இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற இலங்கையர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அக்கரையில் நாம் அமைப்பு கோருகின்றது.

No comments:

Post a Comment