படையினரை முடிவெடுக்க விடுவதாலேயே மக்களிடம் எதிர்ப்பு ஏற்படுகின்றது - ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

படையினரை முடிவெடுக்க விடுவதாலேயே மக்களிடம் எதிர்ப்பு ஏற்படுகின்றது - ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேந்திரன்

சுகாதார துறையை முன்னிலைப்படுத்தாமல் படையினர் முடிவெடுப்பதாலேயே மக்களின் எதிர்ப்பு வலுக்கிறதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது கொடிய தொற்றுக் கிருமியான கொரோனா வைரஸின் தாக்கம் அண்மைக் காலமாக இலங்கையில் அதிகரித்துவருகின்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் மற்றும் இடைத்தங்கல் மையங்களையும், சிகிச்சை நிலையங்களையும் அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்படுவதுடன் அவற்றை படைகள் விஸ்தரிக்க முயற்சிக்கும்போது மக்களிடையே வீண் சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக அன்மையில் வடக்கு மாகாணத்தில் யாழ். கோப்பாய் கல்வியியற் கல்லூரி, வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்களை உருவாக்க முயன்றபோது அச்ச நிலை காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது.

உண்மையிலேயே இந்த இக்கட்டான சூழலில் இந்த கொரோனா தாக்கத்தை தேசிய பேரிடராக கருதி தேசிய ரீதியில் அனைவரும் மனிதாபிமானத்துடனும் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டிய நிலையில் இவ்வாறான அச்சங்கள் அல்லது சந்தேகங்கள் 

ஏற்படுவதற்கு ஆளும் அரசாங்கமே காரணமாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார துறையை விட முப்படையினருக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுப்பதே இந்த முரண் நிலைக்கு காரணமாகியுள்ளது. 

அதிலும் குறிப்பாக வடக்கு மக்கள் இராணுவத்தால் பாதிக்கப்பட்டு பல நிலங்களை இன்றுவரை இராணுவத்திடமிருந்து மீட்க முடியாமல் தவிக்கும் நிலையிலும் கடந்த சில நாட்களாக கடற்படையினர் நூற்றுக்கணக்கில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையிலும் இராணுவம் நேரடியாக சென்று பொது இடங்களை கையகப்படுத்தும்போது மக்களிடையே அச்ச உணர்வு தோன்றுவது இயல்பானதே. 

தவிர தமிழ் மக்கள், சிங்களவர்கள் வடக்கில் தனிப்படுத்தப்படக்கூடாது என்பதற்காகவோ அல்லது வேறு இனவாத காரணங்களுக்காகவோ இந்த எதிர்ப்பை காட்டவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

எதிர்வரும் காலங்களில் கொரோனா சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் மேலும் பல இடங்களை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றவேண்டி வரலாம்.

அப்போதும் இராணுவத்தினர் ஊடாக பொது இடங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கும்போது வீணான குழப்பங்கள் ஏற்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை விசேட, வவுனியா நிருபர்கள்

No comments:

Post a Comment