அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது.
அமெரிக்காவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அந்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 805 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களே நிரம்பிய குழந்தை இருந்தது. அந்த குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வாரங்களேயான குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவலை அம்மாநில கவர்னர் நெட் லமொண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் கொவிட்-19 ஆட்கொல்லி நோய் பரவும் வீதமானது, இத்தாலியில் நோய் பரவும் வீதத்திற்கு சமமானதாக காணப்படுகிறது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் வாரங்கள் பயங்கரமானவையாக இருக்குமென ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார். அதற்குப் பின்னர், துணை ஜனாதிபதி அமெரிக்காவையும், இத்தாலியையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment