உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பன்மடங்கு பெருகி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் நேற்று வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் பேசியதாவது,
''கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 4-வது மாதத்திற்குள் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், வைரஸ் அதி தீவிரமாக உலகம் முழுவதும் பரவும் நிலையால் நான் மிகவும் கவலைப்படுகிறேன்.
கடந்த சில வாரங்களாக கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதை நாம் உணர்கிறோம்.
வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது. அடுத்து வரும் சில நாட்களில் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிடுவது மட்டுமல்லாமல் உயிரிழப்பும் 50 ஆயிரத்தை தொட்டு விடும்.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தபோதும் அப்பகுதிகளில் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் வைரசால் மிகவும் தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த நாடுகளில் கொரோனாவை கண்டுபிடிக்கவும், பரிசோதனை செய்யவும், தனிமைப்படுத்தவும் தேவையான உபகரணங்கள் உள்ளது என்பதை உறுதி செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment