கொரோனா விழிப்புணர்வுக்காக பிரதேச செயலகங்களில் ஒரு பல்தரப்பு அரங்கத்தை ஏற்படுத்த வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

கொரோனா விழிப்புணர்வுக்காக பிரதேச செயலகங்களில் ஒரு பல்தரப்பு அரங்கத்தை ஏற்படுத்த வேண்டும்

ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக்

இன்று உலகத்தை ஆட்டிக்கொண்டிருக்கும் கண்ணுக்கு புலப்படாத வைரஸான கொரோனா கோவிட் 19 என்பதை சகலரும் அறிந்து கொண்டிருக்கின்றோம். உலக நாடுகளில் வல்லரசு நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளே கதிகலங்கி நிற்கும் நிலையில் உள்ளது. 

ஆனால் இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்து எமது நாட்டு மக்களை தனிமையில் வீடுகளில் இருந்து இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு செயற்பாடுகள் செய்து வருகின்றது. ஆனால் பொதுமக்கள் இந்த விடயங்களில் அசிரத்தை காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

கொரோனா கோவிட 19 வைரஸை தடுப்பதற்கு இன்று நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களாக கைகழுவுதல், சமூக உறவாடல்களில் ஒருவருக்கொருவர் இடைவெளியை பேணல், முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தல், முதியோர்களுக்கான தேவைகளை இளையவர்கள் நிறைவேற்றல், தனிமையாக வீட்டிலிருத்தல், போன்றவற்றை நாம் குறிப்பிடலாம். 

இவ்வாறான நிலைமைகள் இருந்தும் இன்று மக்கள் அதனை பராமுகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது. 

இந்ந கொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு தொற்றும் நோயாக காணப்பட்டாலும் இதனை கட்டுப்படுத்துவது இந்ந நாட்டின் பொலிஸ் இராணுவம் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த வைத்தியர்களின் பங்களிப்பு, பிரதேச செயலாளர்களின் வேலை என்ற ஒரு நிலைமையை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். அது மாத்திரமல்லாது எங்களுடைய பிரச்சினைகள் சகலவற்றையும் அரசாங்கம் தீர்த்து தர வேண்டும் எனற் மனநிலையில் நாங்கள் பழக்கப்பட்டு விட்டோம். 

இந்த கொரோன கோவிட் 19 பிரச்சினை கொழும்பிலும், கம்பஹாவிலும், புத்தளம் போன்ற மாவட்டங்களில்தான் உள்ளது எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை என்ற மனோநிலை சகலரிடமும் காணப்படுகின்றது. அத்துடன் முகக் கவசம் அணிந்தால் போதுமானது அல்லது கை கழுவினால் கொரோனா வராது அல்லது சமூக இடைவெளியை பேணுவதால் எமக்கு கொரோனா வராது என்ற மனோநிலை எம்மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. 

அதாவது கொரோனா தொற்றிலிருந்து விடுபட பல்வேறு செயற்பாடுகளை ஒன்றாக கடைப்பிடிக்க அரசாங்கம் கூறியும் மக்கள் ஒன்றை விட்டு ஒன்றை மாத்திரம் கைக்கொள்ளும் நிலைமை காணப்படுகினறது. அரச திணைக்களங்களும் மற்றும் ஏனைய அமைப்புகளும் பல்வேறு செயற்றிட்டங்களினூடாக கொரோன கட்டுப்படுத்தலில் ஈடுபட செயற்பட்டும் மக்கள் அசிரத்தையாக காணப்படுகின்ற ஒரு அபாயகரமான நிலைமை காணப்படுகின்றது.

இந்த வைரஸ் சாதாரண தடிமன் காய்ச்சல் போன்றது என்று கிராம மக்கள் புராதான கால கொத்த மல்லி சுக்கு மரமஞ்சளை அவித்து குடித்தால் போதும் என்றும் இது அரசியலாக்க செய்யப்படும் சதித்திட்டம் என்று இன்னும் ஒரு சிலரும். இது சீனாவின் சதி என்று ஒரு சிலரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் ஒன்றுகூடி இந்த நோயுடைய பாரதூரம் விளங்காமல் கதைத்து திரிகிறார்கள்.

இது எங்களுடைய சவால் என்ற ஒரு தொனிப் பொருளின் பொதுமக்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தப்படல் வேண்டும்., சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். 

கிராமப்புறங்களில் காணப்படும் இளைஞர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காமல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது நடமாடி திரிவதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது. இதன்போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் அடிதடிகளின் போது பாதிக்கப்படும் இளைஞர்கள் பொலிஸாருக்கு ஊறுவிளைவிக்கின்றனர். 

எனவே குறிப்பாக இளைஞர்களுக்கு மாவட்ட இளைஞர் சம்மேளனத்தினூடாக நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றிய அறிவு வழங்கப்பட வேண்டும் மற்றும் இவ்வாறான இளைஞர்களை நாட்டின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொலிஸாருக்கு ஒத்துழைத்து மக்களுக்கு உதவிகள் செய்யும் தொண்டு படையணியாக மாற்றம் பெறல் வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை வீடு வீடாக சென்று மேற்கொள்ள வேண்டும். 

அத்துடன் மட்டகளப்பு மாவட்த்தில் வேலை செய்கின்ற தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரச திணைக்களங்கள், இளைஞர் அமைப்புகள், மத பெரியார்கள், பொலிஸார், இராணுவத்தினர், அப்பிரதேச வைத்தியர்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் பங்குபற்றுதலை பெறக்கூடிய வழிவகையில் ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் ஒரு பல்தரப்பு அரங்கத்தை இணையத்தினூடாக ஏற்படுத்தலாம். 

இப்பல் தரப்பு அரங்கத்தின் கூட்டங்களை இணையத்தளத்தினூடாக நடாத்தலாம் கருத்துகளை பதிவு செய்யலாம். இப்பல்தரப்பு அரங்கத்தினூடாக பெறப்படும் ஆலோசனைகளை ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக வெளிப்படையாக தெரியப்படுத்துவதினூடாகவும் மக்களின் பங்குபற்றுதல் இணைய வழி முறையினூடாக அதிகரிக்கின்ற போதும் பொதுமக்களின் கருத்துகள் எடுத்து கொள்ளுகின்ற போதுமே இந்த கெரோனாவின் கோரப்பிடியில் இருந்த நாங்கள் விடுபடலாம்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் நில புல மத கலாச்சார செயற்பாடுகள் வௌ்வேறாக காணப்படுவதனால் இந்த கொரானா கோவிட் 19 இல் இருந்து பாதுகாப்பு பெற ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் செயற்றிட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையக்கூடிய வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.  

இந்த கொரோனா கோவிட் 19 பொதுமக்களுக்கான அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுதலின் முக்கியத்துவத்தினை விழிப்படைய செய்ய வேண்டியதும் சுகாதார மேம்படுத்தலின் கூட்டான செயற்பாடுகளை விழிப்படைய செய்ய வேண்டியதும் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

No comments:

Post a Comment