(ஆர்.விதுஷா)
வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் இராணுவ பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறாயின் பொலிஸ் பிரிவு செயலிழந்துள்ளதா என்பதை பொலிஸ் மா அதிபர் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை நாட்டு மக்களுக்கு சலுகை வழங்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை எமது அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை நிலவுவதாக கூறிக்கொள்கின்றனர். அவ்வாறாயின் நாம் ஒதுக்கிய நிதி எங்கு சென்றது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பொய்யான பாதையிலேயே பயணிக்கின்றது.
நாட்டின் வளங்களை வெளிநாட்டிற்கு விற்கமாட்டோம் என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றது. இராணுவ ஆட்சியை உருவாக்கும் செயற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றன.
நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைளை வழங்க தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக கூறுகின்றனர். அவ்வாறாயின் அந்த நிதி எங்கு சென்றது ?
போதைப் பொருள் பாவனையை கட்டப்படுத்துவதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு பாடசாலைகளில் பொலிசாரை நிறுத்தும் நடவடிக்கைளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment