(இரா.செல்வராஜா)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு இடங்களில் சிக்கியிருந்த கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பமானது.
ஒரு வார காலத்திற்கு மேலாக சுமார் 6000 இற்கும் அதிகமான ஊழியர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி பல்வேறு இடங்களில் தங்கியிருந்தனர்.
அவர்களில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப விரும்புவோர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் தங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் தமது பெயர் விபரங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொண்டனர்.
சம்பந்தப்பட்ட ஊழியர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் இன்று காலை முதல் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதற்காக போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த 30 பஸ்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் ஊழியர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படுவார்கள்.
ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்வதற்காகப் பொலிஸார் அனுமதிப்பத்திரங்களை வழங்குவார்கள்.
No comments:
Post a Comment