இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 812 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 75 ஆயிரத்து 528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 ஆயிரத்து 981 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 812 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment