அஷ்ரஃப் சிஹாப்தீன்
தாய் நாட்டை நேசித்தல் என்பது
தான் பின்பற்றும் மதத்தைக் கொண்டு
நிரூபிக்கப்படுவதில்லை
மற்றமைகளை நிராகரிப்பது கொண்டு
அது
ஊர்ஜிதப்படுத்தப்படுவதில்லை
இன ரீதியாகப் பகுத்து
அதிகமாக இருப்போரே
நாட்டை நேசிப்பவர்கள் என்று
நிறுவிவிட முடிவதில்லை
மொழிகள் அடிப்படையில்
அது முடிவாக்கப்படுவதுமில்லை
ஒரு மனிதனின
தேசத்தின் மீதான காதல் என்பது
அவனது பிறப்புடன் சம்பந்தப்பட்டது
அவன் நடை பழகிய மண்ணோடும்
அந்த மண்ணிலிருந்து பெற்றருந்திய
நீரோடும்
அந்த மண்ணில் வீசிய
அவன் சுவாசித்த காற்றோடும்
சம்பந்தப்பட்டது
ஒரே தேசத்தில்
வேறொரு தாய்மொழி பேசுமொருவன்
அவசரத்தில் கொடுத்த
உதவிக் கரத்தில் ஊறியது
தேசத்தின் மீதான ஒருவனின் நேசம்
தன் இனமல்லாத ஒருவன்
தனது பண்டிகைக் கொண்டாட்ட விருந்தை
வஞ்சகமேயில்லாத இதயத்துடனும்
புன்னகையுமான முகத்துடனும்
காலங் காலமாக
நம்முன்னே வைத்து வந்ததில்
வேர் விட்டு வளர்ந்தது
தேசத்தின் மீதான ஒருவனின் நேசம்
யாருடைய இரத்தத்தின் மீதும்
யாருடைய கண்ணீரின் மீதும்
யாருடைய வியர்வையின் மீதும்
இன்னொருவரால்
தன்னுடையது என்று
நிரூபிக்கப்படுவதற்கானது அல்ல
ஒரு மனிதனின்
தனது தேசத்தின் மீதான நேசம்!
No comments:
Post a Comment