உழவு இயந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த எட்டு தொழிலாளிகள் காயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

உழவு இயந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த எட்டு தொழிலாளிகள் காயம்

வீதி புனரமைப்பு வேலைகளுக்காக தார் பரல்களை ஏற்றி சென்ற உழவு இயந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த எட்டு தொழிலாளிகளில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஏனைய ஆறு பேரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

பொன்னாலை சந்தியில் இன்று காலை 8.45 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காரைநகர் வீதி புனரமைப்பு பணிகளுக்காக 10 தார் பரல்களை ஏற்றியவாறு எட்டு தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர். 

பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலய வீதியில் இருந்து பொன்னாலை சந்தி வழியாக காரை நகர் வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்ப முயன்ற போது, உழவு இயந்திரத்தில் இருந்து அதன் பெட்டி தனியாக கழன்று தடம் புரண்டது. 

இந்த விபத்தின்போது, உழவு இயந்திரப் பெட்டி தலைகீழாகக் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்தவர்களில் சிலர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் பெட்டிக்குள் அகப்பட்டுக் கொண்டனர்.

அவர்கள் தார்ப்பரல்களுடன் சேர்ந்து வீழ்ந்தனர். பெட்டிக்குள் சிக்கியவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த இருவர் உட்பட 6 பேர் உடனடியாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவர் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் பின்னர் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.

இந்த விபத்தில் பொன்னாலையைச் சேர்ந்தவர்களான மு.நாகமுத்து (வயது-65), பல்லசுட்டியைச் சேர்ந்த வ.வசிகரன் (வயது-34), ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த மா.ஸ்ரீவானந்தம் (வயது-45), நா.றஞ்சன் (வயது-41), வ.தினுஜன் (வயது-18), ரா.தபுசன் (வயது-21), வ.பசுங்கிளிராசா (வயது-63) மற்றும் எஸ்.துஜிபன் (வயது-20) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

பசுங்கிளிராசா, துஜீபன் ஆகியோர் காரைநகர் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனையோர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment