ஐக்கிய தேசிய கட்சியால் தமிழ் முஸ்லிம் கட்சிகளை இணைத்து கூட்டமைப்பு அமைக்க முடியாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு எனும் பெயரில் 17 சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து ஒப்பந்தம் செய்தமை மூலம் பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதை காட்டியுள்ளது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளது, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணந்துள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் ஒப்பந்தம் செய்யப்போவதாக கடந்த 2015 முதல் ஐக்கிய தேசிய கட்சி தன்னுடன் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகளை ஏமாற்றி வருகிறது.
இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும் முதலில் கூட்டணி அமைப்பது பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது என அமைச்சர் மனோ அமைச்சர் ஹக்கீம் போன்றோர் வீராப்பு பேசினர். பின்னர் எந்தக்கூட்டணி ஒப்பந்தமும் இன்றி வேட்பாளர் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தனது வேட்பாளரை அறிவிக்கு முன்பே முஸ்லிம் உலமா கட்சி போன்ற சிறுபான்மை கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதேபோல் இப்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் செய்துள்ளது.
சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் எமக்கு தேவையில்லை என கோட்டாபய ராஜபக்ஷ சொன்னதாக பொய்களை பரப்பி விட்டோருக்கு, தைரியமாக சிறுபான்மை கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் அக்கட்சி முதுகெலும்புள்ள தைரியமான கட்சி என்பது வெளிக்காட்டப்பட்டுள்ளது.
தம்முடன் இருக்கும் முஸ்லிம் தமிழ் கட்சித் தலைவரின் பெயரைக்கூட விழிக்கக்கூட அச்சப்பட்டு அதனை தவிர்த்த சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அவரால் சிங்கள இனவாதிகளை எதிர்த்து ஒரு போதும் சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்ய முடியாது என்பதை இதன் மூலம் தெளிவாகிறது.
அதேநேரம் சிங்கள மக்களின் மிக அதிக ஆதரவுத்தளத்தை கொண்ட பொதுஜன பெரமுன, சிறுபான்மை கட்சிகளுடன் பகிரங்கமாக ஒப்பந்தம் செய்கிறது என்றால் இந்நாட்டில் இனவாதத்தை ஒழித்து நல்லதோர் ஆட்சியை அமைக்கும் ஆற்றலும், நேர்மையும், துணிச்சலும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணிக்கு உண்டு என்பதே உண்மை என்பதை உலமா கட்சி தெரிவித்துக்கொள்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment