எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள விசேட அலங்காரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”போக்குவரத்து சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே பஸ் தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கு ஏற்றதான அலங்காரங்களைச் செய்துள்ளன. அதற்கு மேலதிகமான அலங்காரங்கள் தேவையில்லை. அவை குறித்த தயாரிப்பு நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
கெரண்டியெல்லை விபத்து உட்பட அநேகமான விபத்துகளுக்கு இதுவே காரணமாக அமைந்துள்ளது.
இதனால் எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள விசேட அலங்காரங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து பொலிஸாரும் அறிவுறுத்தல்களை வழங்குவர்.
இச்செயற்றிட்டத்துடன் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தையும் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.
No comments:
Post a Comment