கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதை விரும்பாத பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலரே சுதந்திரக் கட்சியுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் வலுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதில்லை, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளோம். இவ்வாறான நிலையில் சுதந்திரக் கட்சியை உடைக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பது பேச்சுவார்த்தைகளுக்கு ஆரோக்கியமாக அமையாது என்றும் கூறினார்.
சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து செயற்பட வேண்டும் என்றே கட்சி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டே நாம் நேர்மையாக எந்தவித தவறும் இழைக்காமல் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளோம்.
இது சமாதானப் பேச்சுவார்த்தைகளைப் போன்றது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தும்போது ஒரு தரப்பிலிருப்பவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவது பேச்சுவார்த்தைகளை குலைப்பதாக அமைந்துவிடும்.
அதுபோலவே பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகளில் நாம் கலந்துகொண்டிருக்கும் நிலையில் சுதந்திரக் கட்சியை உடையச் செய்யும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கத்துக்கு இழுப்பது ஆரோக்கியமானதாக அமையாது.
கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதை விரும்பாத பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களே இவ்வாறான சதியில் ஈடுபடுகின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது. எமது பக்கத்திலிருந்து நாம் எந்தத் தவறையும் இழைக்கவில்லை. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கேற்ற வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும். இதனைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் அதேசமயம் மாற்று ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசித்து வருகின்றோம். ஐ.தே.கவுடன் கூட்டணி வைப்பதில்லையென்ற உறுதியான நிலையில் இருப்பதால், சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதியே மீண்டும் போட்டியிடுவதா அல்லது அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்குவதா போன்ற பல்வேறு மாற்று யோசனைகள் கட்சிக்குள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment