எச்.எம்.எம்.பர்ஸான்
ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய இருபது ஓவர்களைக் கொண்ட கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (1) ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இருபது அணிகள் பங்குபற்றிய ரேஞ்சர்ஸ் சம்பியன் லீக் (RCL) தொடரில் இறுதிப் போட்டிக்கு ரேஞ்சர்ஸ் அணியினரும் ஓட்டமாவடி வளர்பிறை அணியினரும் தகுதிபெற்று இரு அணிகளும் போட்டியிட்டன.
இறுதிப் போட்டியில் முதல் துடுப்பாட்டத்தை வளர்பிறை அணி தெரிவு செய்தன வளர்பிறை அணியினர் 20 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதில் கூடுதல் ஓட்டங்களாக எம்.பௌசர் 34 ஓட்டங்களையும் எம்.எஸ்.அஸ்பாக் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ரேஞ்சர்ஸ் அணியின் தினேஷ் 2 விக்கட்டினையும் ஏ.எல்.றிபாஸ் 2 விக்கட்டினையும் எம். றியாஸ் 2 விக்கட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய ரேஞ்சர்ஸ் அணியினர் 18 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தனர். இதில் அதிகூடிய ஓட்டங்களாக தினேஷ் 23, ஏ.எல்.பைரூஸ் 29 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழக தலைவரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளருமான யூ.எல்.அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத் தொடரின் பரிசளிப்பு விழா நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா (மம்மலி ஜீ.எஸ்), ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலய அதிபர் எம்.ஏ.ஸாபிர், உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த சுற்றுத் தொடரில் வெற்றி பெற்ற வளர்பிறை அணிக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட ரேஞ்சர்ஸ் அணிக்கும் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடி ஹீரோ லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு அதிதிகளால் கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment