புத்தளம் - மணல்குண்டுவ பிரதேசத்தில் ஹெரோயின் வர்த்தகர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கஜ முத்துக்கள் புத்தளம் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (01) புத்தளம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் மணல்குண்டுவ பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஹெரோயின் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீடு சோதனையிடப்பட்ட போது விலை மதிப்பில்லாத இரண்டு கஜ முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த கஜ முத்துக்களை வனாதவில்லுவ, எலுவன்குளம் பிரதேசத்தில் கொள்வனவு செய்ததாக சந்தேகநபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவற்றின் விலை மற்றும் விற்பனையாளர் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த 620 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கஜ முத்துக்களையும், ஆய்வுக்காக மாணிக்ககல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment