ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் முறையாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றனவா என மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு, அரசாங்கம் ஸ்தீரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், குற்றப்புலனாய்வுப் பிரிவினரை குறைக்கூறுவதில் எந்தவித பலனுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குருநாகலில், செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே மஹிந்த இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இம்மாதம் 11 ஆம் திகதி நாம் எமது ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று குழப்பமானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. அங்கு தலைவர்கள் பலர் இன்று வந்துவிட்டார்கள். இதுதான் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று தெரிகிறது.
இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்புக்கு வர, அந்தக் கட்சியிலிருந்து பலரும் தற்போது எம்முடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வருபவர்களை நாம் ஏற்றுக்கொள்வோம்.
எனினும், ஒரு கட்சியில் பிரச்சினையொன்றை ஏற்படுத்திதான் எமது தரப்பை பலப்படுத்த வேண்டும் என்ற தேவை எமக்குக் கிடையாது.
ஜனாதிபதித் தேர்தல்தான் விரைவில் நடைபெறும். மாகாண சபைத் தேர்தல் ஒன்று உடனடியாக நடைபெற வாய்ப்பில்லை என்றே எனது அனுபவத்திற்கு இணங்க தெரிகிறது.
அத்தோடு. ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து இன்னமும் அரசாங்கம் ஸ்தீரமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துவிட்டதாக கூறியுள்ளார்கள். ஆனால், இன்னமும் சிலர் கைது செய்யப்பட வேண்டியுள்ளார்கள் என்று தற்போது தெரிவித்து வருகிறார்கள்.
இதனால், மக்கள் மத்தியில் இதுதொடர்பாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்காமல், குற்றப்புலனாய்வுப் பிரிவைக் குறைக்கூறி எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை” என மஹிந்த தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment