யானை கடத்தற்காரர் என கூறப்படும் அலி ரொஷான் எனப்படும் விராஜ் ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேருக்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பிணை வழங்கியது.
சட்டவிரோதமாக 5 யானைகளை வைத்திருந்தமை உள்ளிட்ட 36 குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள் தலா 25,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விக்கும் களுவாராச்சி, தம்மிக கனேபொல மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் பிரதிவாதிகள் 8 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க இன்று அனுமதி வழங்கினார்.
பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் சட்ட மா அதிபரிடம் முன்வைத்த பிணை கோரிக்கைக்கு இணங்க, பிணை வழங்கப்படுவதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment