கிராமத்திற்கும் சமய தாபனங்களுக்கும் மத்தியிலான உறவை பாதுகாப்பதன் மூலமே சிறந்ததோர் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (03) பிற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்ற வட மத்திய மாகாண தலைமை சங்க நாயக்கர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட சங்கைக்குரிய கல்லேல்லே ஆரியவங்ச நாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாக நாட்டின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதைப் போன்று ஆன்மீக அபிவிருத்திக்காகவும் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கிராமிய விகாரைகளை புனரமைத்து நாட்டில் பௌத்த சமய எழுச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இது இந்த நாட்டின் பெளத்த மக்கள் பெற்ற வெற்றியாகும் எனக் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை எதுமல்பிட்டிய, லக்ஷ உயன ஸ்ரீ சாக்கிய சிங்காராமய, சேவாகம ஸ்ரீ கௌதம போதி ருக்பாராமய, அத்தனகடவல ஸ்ரீ பராக்கிரமராமய, ஹதமுன ஸ்ரீ கங்காராம ஆகிய விகாரைகளின் விகாராதிபதியும் ஸ்ரீ விஜேபா மகா பிரிவெனாவின் பிரிவெனாதிபதியுமான சங்கைக்குரிய கல்லேல்லே ஆரியவங்ச நாயக்க தேரர் சாசனத்திற்கும் வடமத்திய மாகாணத்திற்கும் மேற்கொண்டுள்ள பணிகளுக்காக உடரட்ட அமரபுர மகா நிக்காயவினால் அவருக்கு கௌரவமளிக்கும் வகையில் வட மத்திய மாகாண தலைமை சங்க நாயக்க பதவி வழங்கப்பட்டுள்ளது.
பெளத்த சாசனத்தின் வளர்ச்சிக்காகவும் பொலன்னறுவையின் சமய எழுச்சிக்காகவும் அவர் மேற்கொண்ட விரிவான பணிகளை ஜனாதிபதி பாராட்டினார். சங்கநாயக்க தேரருக்கு ஜனாதிபதியினால் சன்னஸ் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
உடரட்ட அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய நுவரெலியே சந்ரஜோதி நாயக்க தேரர், அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலன்னே, முன்னாள் அமைச்சர் சிறிபால கம்லத், பொலன்னறுவை நகரபிதா சானக்க சிதத் ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் பொலன்னறுவை Art to Art சங்கத்தின் கனிஷ்ட சங்கத்தினால் பொலன்னறுவை தொல்பொருள் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற சித்திரக் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார். சித்திர கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி, அப்பிள்ளைகளின் திறமைகளை பாராட்டினார்.
No comments:
Post a Comment