காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் விரைவில் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கடந்த காலங்களில் இனவாத அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்தமையால் தான் எமது மக்கள் துன்பத்தை அனுபவித்து வந்தார்கள்.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையால் தான் மக்கள் சந்தோசமாக வாழகூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த மூன்று வருட காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2020 வரை இந்த அரசாங்கத்தினால் மேலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் காலங்களில் பல தேர்தல்களுக்கு முகம் கொடுக்கவுள்ளோம். உங்களது பிள்ளைகள் சந்தோசமாக வாழ வேண்டுமாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும்.
யுத்தத்தில் இழந்த உயிர்களை விட ஏனைய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகவுள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல விடயங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment