வறட்சியான பிந்தங்கிய பிரதேசங்கள் தொடர்பில் நானும், ஜனாதிபதியும் நன்கறிவோம் - பொலன்னறுவையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 2, 2018

வறட்சியான பிந்தங்கிய பிரதேசங்கள் தொடர்பில் நானும், ஜனாதிபதியும் நன்கறிவோம் - பொலன்னறுவையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

வறட்சியான பிந்தங்கிய பிரதேசங்கள் தொடர்பில் நானும், ஜனாதிபதியும் நன்கறிவோம். ஜனாதிபதியவர்கள் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அவ்வாறே எமது தந்தை அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் சுமார் 20 வருடங்கள் எங்களது குடும்பம் இங்கேயேதான் வாழ்ந்து வந்தது. 

எனவே மேதகு ஜனாதிபதியும் நானும் அடிப்படை வசதிகளற்ற இவ்வாறான கிராமங்களில் வாழ்ந்தவர்கள். இங்கிருக்கின்ற அடிப்படையான வாழ்வாதரப்பிரச்சினைகள் தொடர்பில் நன்கு தெரிந்தவர்கள் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

பொலன்னறுவ, மெதமட விகாரையில் குடி நீர் திட்டத்தின் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (01) விகாரை முன்றலில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார் இந்நிகழ்வில் அமைச்சர் பி.ஹெரிசன்,இராஜாங்க அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் அன்சார் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் இந்த நீர்வழங்கல் திட்டமானது ஓனேகம பிரதேசம் வரைக்கும் கொண்டு செல்லப்படவிருக்கிறது. அவ்வாறே புறனேகம நீர்வழங்கல் திட்டமானது பாரிய நீர் வழங்கல் திட்டமாகும். நீண்ட காலமாக இந்த பிரதேசத்தில் சுத்தமான குடிநீருக்காக மக்கள் படுகின்ற அவஸ்தையினை தீர்க்கும் ஒரு குடிநீர் திட்டமாகவே இத்திட்டம் அமையும். சுமார் 45 கி.மீ தூரத்திற்கு விஸ்தரிக்கப்படும் இத்திட்டத்திற்கு 425 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தினை 20 மாதங்களில் செய்து முடிக்க உத்தேசித்துள்ளோம். 

இதுமாத்திரமின்றி சேவாகம பிரதேசம் தொட்டு தம்பால பிரதேசம் வரைக்கும் அதையும் தாண்டியும் குழாய்வழியான நீர்வழங்கல் திட்டத்தினை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கும் 450 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனக்கும் தனிப்பட்ட ரீதியில் இந்த பிரதேசம் தொடர்பில் ஒரு பொறுப்பு இருக்கின்றது அதுதான் தம்பால கிராமத்தில் உள்ள பாடசாலையில் எமது தந்தை அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் சுமார் 20 வருடங்கள் எங்களது குடும்பம் இங்கேயேதான் வாழ்ந்து வந்தது. எனவே மேதகு ஜனாதிபதியும் நானும் அடிப்படை வசதிகளற்ற இவ்வாறான கிராமங்களில் வாழ்ந்தவர்கள். இங்கிருக்கின்ற அடிப்படையான வாழ்வாதரப்பிரச்சினைகள் தொடர்பில் நன்கு தெரிந்தவர்கள். 

இவ்வாறான பிரதேசத்திலிருந்து உருவாகியுள்ள ஜனாதிபதியொருவரின் கீழே மக்களின் அத்தியவசிய தேவையான குடிநீரை வழங்கும் ஒரு அமைச்சராக நியமிக்கப்பட்டு இந்த மக்களுக்கு சேவை செய்ய கிடைத்தையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அத்தோடு இந்த மக்களுக்கு அபிவிருத்தி தொடர்பில் எனது அமைச்சினூடாக செய்ய முடியுமான அதிகபட்ச சேவைகளை செய்ய முடிகின்றமையிட்டும் எனது நன்றிகளை ஜனாதிபதியவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
மேதகு ஜனாதிபதியவர்கள் விசேடமாக சுத்தமான குடிநீரினை இந்த பிரதேசங்களுக்கு வழங்குவதற்கு அவதானம் செலுத்துகின்ற ஒருவராக இருக்கின்றார். குறிப்பாக அசுத்தமான நீரினை பருகுவதனால் உண்டாகும் தொற்றா நோயான சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான வேறு சில நோய்கள் இந்த வடமத்திய மாகாணத்திலுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அதிகமாகும் என்கின்ற அடிப்படியில் ஜனாதிபதியவர்களின் தேர்தல் வாக்குறுதிக்கு இணங்கவும் இந்த குடிநீர் வழங்கல் திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பின்தங்கிய உலர்வலைய பிரதேசங்களில் கிணறுகள் மூலம் அல்லது வேறு நீர் மூலவளங்கள் மூலம் நீரினை பெற்றுக்கொள்வதை விடுத்து குழாய்வழியான தூய நீரினை பெற்றுக்கொடுக்கின்ற வேலைத்திட்டத்தினை இங்கு மாத்திரமல்ல நாடு முழுவதிலும் நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம். இதற்க்கு ஜனாதிபதி அவர்களே தலைமைதாங்குகிறார். இந்த திட்டங்களை கொண்டு நடத்துவதில் ஏற்படுகின்ற உள்ளக முரண்பாடுகள், திறைசேரியுடனான பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து இத்திட்டங்கள் வெற்றியளிக்க அவரது பங்களிப்பு எங்களுக்கு பெரிதும் உதவுகின்றது.

விசேடமாக இந்த வடமத்திய மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களில் ஜனாதிபதியின் கால எல்லை முடிவதற்குள் 80 விகிதமான பிரதேசங்களுக்கு ஜனாதிபதியின் விசேட செயலணியின் மூலம் குழாய்வழியான நீர்வழங்கலை பூர்த்தி செய்ய முடியும். இதன்மூலம் பெருகிவருகின்ற சிறுநீரகம் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்த முடியும் என நான் எண்ணுகிறேன். இதற்க்கு தேவையான செயல் திட்டங்களில் பலதை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம். 
இன்னும் சில செயற்திட்டங்களை நாங்கள் ஆரம்பிக்க தயார் நிலையில் இருக்கின்றோம். இதில் ஒன்றுதான் பாரிய பொலன்னறுவை கிழக்கு நீர் வழங்கல் திட்டமாகும்.இதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை சீன வங்கி வழங்குகின்றது. இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் தாகத்தினை தணிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சியை நான் நன்கு அறிவேன். இந்த நிதி தொடர்பிலான கலந்துரையாடல்களுக்கு மேதகு ஜனாதிபதியுடன் இரண்டு தடவைகள் நானும் சீனாவுக்கு பயணம் செய்துள்ளேன். 

எனவே மக்களுக்கு தூய்மையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் அக்கறையோடு செயற்படும் ஜனாதிபதியவர்களுக்கு இந்தநேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறினார். 

நாச்சியாதீவு பர்வீன்

No comments:

Post a Comment