கடத்தப்பட்டு விசம் வழங்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் - News View

About Us

About Us

Breaking

Friday, August 3, 2018

கடத்தப்பட்டு விசம் வழங்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில்

வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் விசம் வழங்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று (02) பாடசாலை விட்டு வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன சிறுமிகள் இருவரும் வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி அயலவர்களின் உதவியுடன் தப்பித்துள்ளனர்.

இதனையடுத்து அவ் வீட்டை இரவு பூந்தோட்டம் இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதன்போது தமக்கு அலரி விதை வழங்கப்பட்டதாக குறித்த சிறுமிகள் தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரு சிறுமிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து சாப்பாட்டு பார்சல், தண்ணீர் போத்தல், ஆண் ஒருவரின் ஒரு சோடி பாதணிகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர், பாடப்புத்தகம் வாங்குவதற்காக இருவரும் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் தங்களை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து சென்று கத்திமுனையில் துன்புறுத்தியதாகவும், பலவந்தமாக அலரி விதை உட்கொள்ள செய்துள்ளதாகவும் சம்பவ இடத்திலிருந்து தப்பிவந்த சிறுமிகள் நடந்தவற்றை கூறியுள்ளனர்.

இதையடுத்து நேற்று (02) இரவு 9.00 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, அலரி விதை உட்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியதால், உடனடியாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், மேலதிக மருத்து பரிசோதனைகளின் பின்னரே மேலதிக விபரங்களை கூற முடியுமென்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கே. வசந்தரூபன்

No comments:

Post a Comment