மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மாணிக்கவாசகம் தயாபரன் இன்று புதன்கிழமை (1.8.2018) காலை.9.00 மணியளவில் தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த மா.தயாபரன் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் இன்று புதன்கிழமை (1.8.2018) முதல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளாராக கடமையை ஏற்றுக்கொண்டார்.
இலங்கை நிருவாகசேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக 1991 ஆம் ஆண்டு முதன் முதலாக கடமையாற்றினார். அதன்பின்பு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகவும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் கிழக்கு மாகாண முகாமையாளராகவும் கடமையாற்றினார். சுமார் 28 வருடங்கள் அரசசேவையில் சேவையாற்றியவர்.
தற்போது வெருகல் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்துள்ள நிலையில் தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக இன்று முதல் கடமையாற்றவுள்ளார். இதேவேளை மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய கே.குணநாதன் வெருகல் பிரதேச செயலாளராக கடமையாற்றவுள்ளார்.
No comments:
Post a Comment