வவுனியாவில் அண்மைக்காலமாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மனித உரிமைகள் பவுண்டேசனுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
இதனால் வரும் எவ்வித தடங்கல்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொறுப்பு இல்லை என்று வவுனியா அலுவலக பொறுப்பதிகாரி சட்டத்தரணி ஆர்.எல். வசந்தராசா தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் மனித உரிமைக்குழு என்ற பெயரில் பல இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றது. இது தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது. வவுனியாவில் செயற்பட்டுவரும் மனித உரிமைகள் பவுண்டேசன் நிறுவனமே பணம் வசூலிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கும் எமது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது. அவர்களின் செயற்பாடுகள் வேறு, எமது செயற்பாடுகள் வேறு அவர்கள் ஒரு பவுண்டேசனாகவே செயற்பட்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் இவற்றை சரியாக புரிந்து கொண்டு செயற்படவேண்டும் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கும் எமது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது இதனால் வரும் இழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்பதை பொதுமக்கள் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த மனித உரிமைகள் பவுண்டேசன் என்ற பெயரில் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு பலரிடம் அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்வதற்கும் தொலைபேசி சிம் அட்டை போன்ற ஏனைய தேவைகளுக்கும் பணம் வசூலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment