பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை 215 வீதத்தால் அதிகரிக்கும் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைகளில் செய்தி வௌியாகியுள்ளது.
நீதிபதிகளின் சம்பளத்திற்கு சமமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான யோசனை, அனுமதிக்காக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப மற்றும் டெய்லி மிரர் பத்திரிகைகளில் இன்று (02) செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
ஜூலை 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கும் வரும் வகையில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தயாராகி வருவதாக குறித்த பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது 54,285 ரூபாவாகக் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம், 1,20,000 வரையும், 63,500 ரூபாவாகக் காணப்படும் பிரதி அமைச்சர் ஒருவரின் சம்பளம் 1,35,000 ரூபா வரையும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது 65,000 ரூபாவாகக் காணப்படும் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் சம்பளத்தை 1,40,000 ரூபாவாக உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அலுவலகக் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும், தொலைபேசி கொடுப்பனவாக 50,000 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment