வௌ்ளவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழுவொன்று மீது பொலிஸாரால் நேற்றிரவு (31) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
வௌ்ளவத்தை சாலிமன்ட் வீதி பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் கார் ஒன்றில் ஹெரோயின் வர்த்தகம் மற்றும் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக வௌ்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.
இதன்போது அந்தக் கார் வேகமாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது, ஹோட்டல் தாப்பையில் மோதியுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதும் மோதியதில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸார் சென்ற மற்றொரு முச்சக்கர வண்டியுடனும் அந்த கார் மோதியதையடுத்து ஒரு பொலிஸார் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதனால் காரில் இருந்த பிரதான சந்தேகநபர் காயமேற்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹெட்டியாரச்சிகே கமல் அபேரத்ன என்ற 39 வயதுடைய சந்தேகநபரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
சந்தேகநபர் ஏற்கனவே ஹெரோயின் வைத்திருந்த மற்றும் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின் போது காரில் இரண்டு பெண்கள் இருந்துள்ளதுடன், காரின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment