சுதந்திரத்தின் பின்னர் சுகாதார சேவையை கூடுதலாக முன்னேற்றிய அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே என்று சுகாதாரபோசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்
உலக சுகாதார அமைப்பின் உபதலைவர் பதவியைப் பெற்றுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை கௌரவிக்கும் சுவபதி அபிஷேக விருதுவிழா நேற்று (31) தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சும் உலக சுகாதார அமைப்பும் சுகாதார தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
மேலும், தனக்குக் கிடைத்த உலக சுகாதார அமைப்பின் உபதலைவர் பதவி அமைச்சிற்கும் நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், 20 மருந்துப் பொருட்களின் விலை விரைவில் குறைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இவற்றில் பத்து மருந்துகள் புற்றுநோய்க்காக பயன்படுத்தும் மருந்துகளாகும் என்று அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சேனக்க பிபிலே மருந்துக்கொள்கையை தேசிய மருந்துக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு போதைப்பொருள் மற்றும் சிகரெட் பாவனைக்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்தி நாட்டின் சுகாதார சேவையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட சேவைக்காக உலக சுகாதார அமைப்பு அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு அந்த அமைப்பின் உபதலைவர் பதவியை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய பேராசிரியர் காலோ பொன்சேகா, ராஜித சேனாரத்ன குறுகிய காலத்திற்குள் சுகாதாரத் துறைக்காக அளப்பெரும் சேவையை ஆற்றியிருப்பதாக குறிப்பிட்டார். மருந்துப் பொருட்களின் விலையைக் குறைத்தமை, புகையிலைப் பாவனையை கட்டுப்படுத்தியமை, புற்றுநோயாளர்களுக்கு ஆயுள்வரை இலவசமாக சிகிச்சை அளித்தல், சீனிப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை போன்ற முக்கிய நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொண்டிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கலாநிதி சரத் விஜயசூரிய, இனவாதத்தையும் மத வாதத்தையும் ஒழிப்பதன் ஊடாக மாத்திரமே நாட்டின் ஒழுக்க விழுமியங்களை கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment