பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனா இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்து சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் கடந்த வாரம் பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அங்கு உரையாற்றிய போது சச்சிதானந்தம் வெளியிட்ட கருத்தே இங்கு தமிழ் மற்றும் ஏனைய சில சமூகங்களின் மத்தியில் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது.
இலங்கையை ஒரு பௌத்த - இந்து நாடு என்று வர்ணித்த சச்சிதானந்தம், "இது வேறு சமூகத்தவர்களுக்கான நாடு அல்ல, இங்குள்ள பாரம்பரியத்தை ஏற்று நடக்காதவர்கள், நாட்டைவிட்டு வெளியேறி தமது பாரம்பரியங்களை பின்பற்றும் நாடுகளுக்கு போகலாம்" என்று கூறியிருந்தார்.
சவூதி அரேபியாவில் உள்ள பாதிப்பேர் முஸ்லிமல்லாதவர்கள் என்றும் ஆனால், அங்கு இஸ்லாத்துக்கு பொருந்தாத பன்றி இறைச்சியை யாரும் உண்ண முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் பௌத்தர்களும் இந்துக்களும் வாழும் நாட்டில் மாட்டிறைச்சி எதற்கு? இங்கு மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவரது கருத்துக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருப்பது ஒருபுறமிருக்க, தமிழ் சமூகத்தினுள்ளிருந்தே பலத்த எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இது தேவையில்லாத ஒரு சர்ச்சை என்று இதனைக் கண்டித்துள்ள ஆய்வாளரும் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான சித்ரலேகா மௌனகுரு, தான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில், எவ்வளவோ காலத்துக்கு முன்னரே அங்கு மாடு உண்ணும் பழக்கம் இந்துக்களின் மத்தியிலும் வந்துவிட்டது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் தமிழ் பத்திரிகைகள், இணையதளங்களிலும் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் கருத்துக்கு பலத்த கண்டனங்களும் மாற்றுக் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தமிழ் சிவில் சமூக அமையம் எனும் அமைப்பும் இந்தக் கருத்தைக் கண்டித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த '' இது இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் மட்டுமான பூமி. இங்கு வேறு இனங்கள் மதங்கள் வாழ முடியாது'' எனும் கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன் இவ்வாறான இந்துத்துவ சக்திகளுக்கு தமிழ் ஊடகங்களோ, தமிழ் மக்களோ இடமளிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிவசேனா இயக்கத்தின் தூண்டுதலில் மாட்டிறைச்சிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்படும் பிரசாரங்களால் இதுவரை பலர் கொல்லப்பட்டுள்ளனர். பல கலவரங்கள் கூட இதனால் தோற்றம் பெற்றுள்ளன.
இந் நிலையில் இலங்கையிலும் மாட்டிறைச்சிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து, குறிப்பாக இதன் மூலம் முஸ்லிம்களை இலக்கு வைத்து தமிழ் - முஸ்லிம் முரண்பாடு ஒன்றைத் தோற்றுவிக்க இந்த இனவாத மதவாத சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கு தமிழர்களோ முஸ்லிம்களோ ஒருபோதும் துணைபோகக் கூடாது. இது தொடர்பில் தமிழ் - முஸ்லிம் சிவில் சமூகம் விழிப்புடன் இருப்பது காலத்தின் தேவையாகும்.
Vidivelli
No comments:
Post a Comment