2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு புத்தளம் மாவட்டம் தமக்கென ஒரு முஸ்லிம் எம்.பி.யை பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுகின்றது.
1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்ற தேர்தலின் போது, இலங்கையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை புத்தளம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எச்.எஸ். இஸ்மையில் பெற்றுக் கொண்டார். முதலாவது பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனு கோரப்பட்ட போது புத்தளம் தொகுதியில் போட்டி வேட்பாளர் யாரும் இல்லாத நிலையில் இலங்கையின் முதலாவது எம்.பி. புத்தளம் தொகுதிக்கு கிடைக்கபெற்றார்.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் எம்.எச்.எம். நவவி ஐ.தே.கட்சி பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் ஆளும் கட்சியில் ஐ.தே.கட்சி சார்பாக ஐந்து உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர். நவவி 33,487 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்தில் காணப்பட்டார். 1931 வாக்குகளை குறைவாகப் பெற்றதன் காரணமாக நவவி பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.
எனினும் அமைச்சர் ரிஷாத் தான் புத்தளம் மக்களுக்கு கொடுத்த வாக்கினை காப்பாற்றி நவவியை தேசிய பட்டியல் மூலம் எம்.பி.யாக்கினார். இதன் மூலம் புத்தளம் மாவட்டத்திற்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநித்தித்துவம் கிடைக்கப்பெற்றது.
மர்ஹூம் எம்.எச்.எம். நெய்னா மரைக்காருக்குப் பின்னர் புத்தளம் மாவட்டத்ததில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெற்று எம்.பி.யாகவில்லை. புத்தளம் தொகுதி முஸ்லிம் எம்.பி. ஒருவருக்காக ஏங்கி நிற்கும் நிலையில் இன்றும் காணப்படுகின்றது.
1994 இல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் புத்தளம் டாக்டர் ஐ.எம். இல்லியாஸை யாழ். மாவட்ட எம்.பி. யாக்கினார். அதன் பின்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய பட்டியல் மூலம் கே.ஏ. பாயிஸை புத்தளத்திற்கு எம்.பி. யாக்கினார். இறுதியாக அமைச்சர் ரிஷாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் நவவியை தேசிய பட்டியல் எம்.பி.யாக்கினார்.
நவவியை தேசியப்பட்டியல் மூலம் எம்.பி.யாக்கியது தொடர்பில் பல் வகையான எதிர்ப்புக் குரல்கள் ஆரம்பம் முதல் ஒலித்துக் கொண்டே இருந்தன. அந்த குரல்கள் ஓங்கி ஒலித்து நவவி தனது எம்.பி. பதவியை தற்போது இராஜினாமா செய்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்திற்கு சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்க ஒரு எம்.பி. இருப்பதை எண்ணி புத்தளம் மாவட்ட முஸ்லிம், தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் சந்தோஷமாக இருக்கும் நிலையில் நவவியின் எம்.பி. பதவி இல்லாமல் போவதை எண்ணி அம் மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போதைய பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள். காணப்படுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். தெளபீக் மட்டக்களப்பு மாவட்டத்தில் எஸ். அமீர் அலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அலிசாஹிர் மெளலானா ஆகியோர் எம்.பி.க்களாக காணப்பட அம்பாறை மாவட்டத்தில் பைஸல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்..ஐ.எம். மன்சூர், நஸீர் ஆகியோர் எம்.பி.களாக காணப்படுகினறனர்.
வன்னி மாவட்டத்திற்கு ரிஷாத் பதியுத்தீன், காதர் மஸ்தான் ஆகியோர் எம்.பி.களாக உள்ளனர். கண்டி மாவட்டத்திற்கு ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ. ஹலீம் ஆகிய இருவரும் எம்.பி.களாக இருக்கும் அதேவேளை கேகாலை மாட்டத்திற்கு கபீர் ஹாசீமும் அனுராதபுர மாவட்டத்திற்கு ஏ.ஆர். இஷாக்கும் எம்.பி.யாக உள்ளனர்.
முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், பைஸல் முஸ்தபா, ஏ.எச்.எம்.பெளஸி ஆகிய நால்வரும் கொழும்பு மாவட்டத்தில் எம்.பி,க்களாக உள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் எம்.எச்.எம். நவவி எம்.பி.யாக இருந்தார். இவர்களில் தேர்தல் மூலம் தெரிவாகி பாராளுமன்றம் சென்றவர்கள் 15 பேர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள் 6 பேர். மொத்தம் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் தற்போதைய பாராளுமன்றத்தில் காணப்படுகினறனர். மொத்த எம்.பி.க்கள் 21 பேரில் கிழக்கு மாகாணத்திற்கு 10 எம்.பி.க்கள் காணப்படுகின்றனர்
வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு தொகுதியாக புத்தளம் தொகுதியும் காணப்படுகின்றது கடந்த மூன்று தசாப்த கால தேர்தல் வரலாற்றில் புத்தளம் தொகுதிக்கு விகிதாசார தேர்தல் முறை மூலம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லாத நிலையில் தற்போதைய அரசியல் சூழ் நிலையில் நவவி தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்தது தொடர்பில் புத்தளம் மக்கள் பெரும் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து முதல் வருடத்தில் நவவிக்கு தேசிய பட்டியல் மூலம் எம்.பி. பதவி தருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறிய பிரகாரம் நவவிக்கு எம்.பி. பதவியை வழங்கி வைத்தார். அதற்காக புத்தளம் மக்கள் அமைச்சர் ரிஷாதிற்கு நன்றி கடன்பட்டுள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் இவ்வருடம் நடைபெற இருப்பதாக எதிர்பார்க்கப்படும் வடமேல் மாகாண சபை தேர்தல் அடுத்தடுத்த, வருடங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றினை புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வர் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஏனெனில் இறுதியாக நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது புத்தளம் மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளிலும் புத்தளம் தேர்தல் தொகுதி ஐ.தே. கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்ற போதும் புத்தளம் தொகுதி முஸ்லிம்களுக்கு பெரிதாக எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
பொதுவாக தேர்தல் ஒன்றினை எதிர் கொள்கின்ற போது அரசியல் அதிகாரத்துடன் தேர்தல் களத்தில் குதிப்பது என்பது தேர்தல் வெற்றிக்கு சாதகமாக அமையும். அடுத்த தேர்தல்களின் போது பாராளுமன்ற தேர்தல் அதிகாரம் புத்தளம் மாவட்ட முஸ்லிம்களுக்கு இல்லாத நிலையில் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்து தமது அரசியல் அதிகாரத்தினை புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் தக்கவைத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமே.
அதே போன்று எந்த ஒரு தேர்தல் தொகுதிக்கும் தனக்கென ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கும் போது அந்த தொகுதிக்கு கிடைக்கும் அபிவிருத்தி பணிகளை கட்டுப்படுத்த முடியாது. நமக்கென ஒரு எம்.பி. இல்லாத நிலையில் நமது அபிவிருத்திக்கு அடுத்த தேர்தல் தொகுதி எம்.பி. யை எதிர்பாக்கும் நிலையை. அதனை கடந்த மூன்று தசாப்த விருப்புவாக்கு வரலாற்றில் புத்தளம் தொகுதி முஸ்லிம்கள் அனுபவித்துள்ளனர். இக் காலப் பிரிவில் பிரதி அமைச்சராக இருந்த
கே.ஏ. பாயிஸ் புத்தளம் மாவட்டத்திற்கு செய்த அபிவிருத்திகள்
விதிவிலக்காகும். பாயிஸ் பிரதி அமைச்சராக இருந்த காலப் பிரிவில் கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய விடயங்களில் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் மாத்திரமன்றி ஏனைய சமூகமும் நிறையவே அபிவிருத்திகளை கண்டு கொண்டது. எனவேதான் எமக்கென ஒரு எம்.பி. இருக்கின்ற போது நமக்கு தேவையான அபிவிருத்திகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
நவவியின் இராஜினாமாவை எண்ணி கவலையுறும் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது நவவி 1931 வாக்குகளால் தோல்வியடைந்ததை எண்ணிப் பார்க்கவில்லை. 1931 வாக்குகளை நவவிக்கு வழங்கி இருப்பின் நவவி தேசிய பட்டியலை நாட வேண்டி இருக்காது. புத்தளத்திற்கு அதுவும் புத்தளம் தொகுதிக்கென்று ஒரு முஸ்லிம் எம்.பி. கிடைத்திருப்பார்.
விகிதாசார தேர்தல் முறை இருக்கும் வரை புத்தளம் முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதன் மூலம் மட்டுமே எமக்கென்று ஒரு முஸ்லிம் எம்.பி.யைப் பெற்றுக் கொள்ள முடியும். புத்தளம் மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம் வேட்பாளர்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை அளிப்பதன் மூலம் நாம் தமக்கென ஒரு முஸ்லிம் எம்.பி. யை வாழ் நாளிலே பெற்றுக் கொள்ள முடியாது. மீண்டும் தொகுதி ரீதியிலான தேர்தல் முறை வரும் போது நாம் நமெக்கென ஒரு எம்.பி.யை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் முஸ்லிம்கள் இப்பொழுதே திட்டமிட வேண்டும். பெருபான்மை கட்சிகளை நம்பி, நம்பி நாம் கற்ற பாடங்கள் போதுமா அல்லது பெரும்பான்மை கட்சிகள் மூலம்தான் ஒரு முஸ்லிம் எம்.பி.யை பெறுவதா அல்லது சிறுபான்மை கட்சியில் தனித்து போட்டியிட்டு புத்தளத்திற்கு ஒரு முஸ்லிம் எம்.பி.யைப் பெற்றுக் கொள்வதா என்று இப்பொழுதே சிந்தித்து, திட்டமிட வேண்டும்.
அதேவேளை புத்தளம் மாவட்டத்திலுள்ள ஒரு குழுவினர் மாற்று கட்சிகளை நாடுவதா என்றும் சித்திக்க ஆரம்பித்துள்ளனர். இவற்றை எல்லாம் சிந்தித்து திட்டமிட வேண்டிய காலம் இன்றாகும். பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனு கோரப்பட்ட பின்னர் சிந்தித்து செயற்படுவதாலேயே புத்தளம் மக்கள் முஸ்லிம் எம்.பி.யை இதுவரை இழந்து வந்துள்ளனர்.
தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்த நவவியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்று புத்தளம் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தலைவர்களில் ஒருவராக இருக்கும் நவவி தொடர்ந்து அந்தக் கட்சியில் இருப்பாரா, அல்லது நவவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளுமா என்ற வினாக்களுக்கு விடை தேட முடியாத நிலையில் புத்தளம் மக்கள் காணப்படுகின்றனர். எம்.பி. பதவிக்கு சமமான ஒரு பதவி தற்போதுள்ள கட்சி மூலம் நவவிக்கு கிடைக்கும் என்ற ஒரு உறுதியான நம்பிக்கையில் புத்தளம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
Vidivelli
No comments:
Post a Comment