மியன்மாரிலிருந்து வன்முறை காரணமாக தப்பிவந்த ரோஹிங்ய அகதிகள் புதிய பிரச்சினையொன்றை எதிர்கொள்ளவுள்ளனர். அதுதான் பாலியல் வன்புணர்வினால் உருவான குழந்தைப் பிரசவங்கள் விரைவில் இடம் பெறவுள்ளமையாகும்.
பங்களாதேஷிலுள்ள விசாலமான அகதிமுகாமில் ஆகஸ்ட் 2017 இற்கும் பெப்ரவரி 2018 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பாலியல் வன்புணர்வின் காரணமாகக் கருவுற்ற 160 பெண்கள் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பினால் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் 13,500 ரோஹிங்ய பெண்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்திலும், பங்களாதேஷை நோக்கி வந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் குறிப்பிட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே உச்ச அளவில் காணப்பட்டன. எனவே (ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில்) இந்த மாதத்தில் அதிகமான பெண்களுக்கு பிள்ளைகள் பிறக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம் என மகப்பேற்றுத் தாதியும் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்புடன் செயற்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான தலைமை இணைப்பாளருமான டேனியல்லா காஸ்ஸியோ தெரிவித்தார்.
உதவிப் பொருட்களின் தட்டுப்பாடு, எதிர்வரும் நாட்களில் வரவுள்ள பருவப் பெயர்ச்சிக்கால மழை வெள்ளம் ஆகியவற்றினிடையே அதிகரித்துவரும் ரோஹிங்ய சனத்தொகையின் அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்வதற்கு போராடிவரும் நிலையில் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு மற்றும் சேவ் த சில்ரன் அமைப்பு போன்றவை புதிய மகப்பேறுகளுக்கான ஆயத்தங்களில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் துரிதமாக ஈடுபட்டுவருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொக்கம் சுமார் 700,000 ரோஹிங்யர்கள் பர்மா என அறியப்பட்ட மியன்மாரிலிருந்து பங்களாதேஷுக்கு தப்பி வந்தனர். முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்ய முஸ்லிம்கள் பல தசாப்த காலமாக கொடூரமான அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து வந்தனர். கடந்த வருடம் வன்முறைகள் மிகவும் அதிகரித்தன.
இதன்போது மியன்மார் இராணுவத்தினரால் கிராமங்கள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும், பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாகவும் அகதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
13 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டோரையே அவர்கள் இலக்கு வைத்தனர் என பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்புடன் பணியாற்றும் மகப்பேற்றுத் தாதியான றொக் ஷானா அக்தர் தெரிவித்தார். நவம்பர் மாதத்தில் மியன்மார் இராணுவம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தமது பாதுகாப்புப் படையினர் கொலைகள் மற்றும் பாலியல் வன்புணர்வின் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தது.
தான் பங்களாதேஷை வந்தடைந்தவுடன் கர்ப்பமுற்றிருப்பதை உணர்ந்ததாக 25 வயதான மதீனா ஹாத்தூன் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்னர் அவரது கணவர் அவர்களது கிராமத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார். தான் விதவையாக இருந்தது என்னை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய `இராணுவ சிப்பாய்க்கு' வசதியாகப் போய்விட்டது என அவர் குறிப்பிடுகின்றார்.
குடும்பத்தினரதோ அல்லது மகப்பேற்றுத் தாதியினதோ உதவியின்றி சனநெரிசல்மிக்க முகாமில் அவர் தனது பெண் குழந்தையான ரோசினாவைப் பெற்றெடுத்தார். `இது நினைத்துப் பார்க்க முடியாத வேதனையும் வெட்கமுமாகும்'என அவர் தெரிவித்தார்.
தான் மட்டுமல்ல இன்னும் ஏராளமான பெண்கள் தன்னைப்போல் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதே ஹாத்தூனுக்கு ஒரேயொரு ஆறுதலாகும். `இது எனது தலைவிதி மாத்திரமல்ல' என அவர் குறிப்பிடுகின்றார்.
உலகின் மிகவும் நெருக்கமான அகதிமுகாமான தெற்கு பங்களாதேஷில் அமைந்துள்ள குடுபலோங் ரோஹிங்ய அகதிமுகாமில் ஹாத்துன் வசித்து வருகின்றார். இங்கு நிலைமைகள் மிகவும் மோசமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக அதிக பிள்ளைகள் உள்ள குடும்பத்தினர் போதிய உணவு கிடைக்காததனால் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்கையில் முகாம்களில் எதிர்பாராத அளவில் குழந்தைப் பிறப்புக்கள் அதிகரித்துள்ளன. 2018 ஆம் ஆண்டு 50,000 குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் மந்த நிலையிலுள்ள சுகாதார சேவைகளுக்கு மேலும் சுமையாக மாறியுள்ளது.
அதிகரிக்கவுள்ள பாலியல் வன்புணர்வினால் உருவான குழந்தைப் பிரசவங்கள் சுகாதாரப் பராமரிப்புப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கிவிடும் என காஸ்ஸியோ தெரிவித்தார்.
அதிகரிக்கவுள்ள குழந்தைப் பிறப்புக்களுக்கு தயாராகுவதென்பது மிகவும் சிக்கலான விடயமாகும். திருமணமாகத பெண்ணொருவர் கருத்தரிப்பதிலுள்ள அகெ ளரவ நிலை காரணமாக பாலியல் வன்புணர்வினால் எத்தனை பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள் என்பதை எமது அமைப்பினால் மிகச் சரியாக கணக்கீடு செய்ய முடியாமல் இருக்கின்றது.
முகாம்களிலுள்ள பாலியல் வன்புணர்வுக்குள்ளான பெண்கள் தாம் கருவுற்றிருப்பதை மறைப்பது சாதாரண விடயமாகக் காணப்படுகின்றது. 80 வீதமான ரோஹிங்ய கர்ப்பிணிப் பெண்கள் தமது வீடுகளிலேயே குழந்தைகளைப் பிரசவித்தவர்களாவர். எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் கூற்றுப்படி அதிகமான பிரசவங்கள் பதிவாகாமல் விடப்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சமூகத்திலுள்ள குடும்பங்கள் தேவையற்ற குழந்தைகளை உறவினர்களுக்கோ அல்லது அயலவர்களுக்கோ அல்லது விஷேடமாக குழந்தைகளற்ற தம்பதியினருக்கோ கொடுத்து விடுகின்றனர் என தெரிவித்திருக்கும் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் சேவ் த சில்ரன் அமைப்பு ஆகியன சில குழந்தைகள் வாயில் படிகளில் கைவிடப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளன.
பல கைவிடப்பட்ட சிறுவர்கள் கடுபலோங்கில் அமைந்துள்ள எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் மகப்பேற்று சிகிச்சை நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். `அவ்வாறான குழந்தைகளை வைத்திருப்பதற்கான இடமோ அல்லது வசதியோ எம்மிடம் இல்லை' என காஸ்ஸியோ தெரிவிக்கின்றார்.
சில நாட்களுக்கு அங்கு தங்க வைக்கப்படும் குழந்தைகள் பின்னர் சேவ் த சில்ரன் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவர்கள் ஏனைய ரோஹிங்ய குடும்பங்களிடம் அக்குழந்தைகளை ஒப்படைக்கக் கூடிய முறைசாரா பராமரிப்பு முறைமையொன்றினை செயற்படுத்தி வருகின்றனர்.
இம்மாதம் அதிகரிக்கவுள்ள குழந்தைகள் தொடர்பில் இந்த முறைமையினை நிலைபேறானதாக செயற்படுத்துவதற்கு பங்களாதேஷின் ஒத்துழைப்பு அவசியமாகும் என சேவ் த சில்ரன் அமைப்பின் பெண் பேச்சாளர் டப்னீ குக் தெரிவித்தார்.
விருப்பமில்லாத கருவைச் சுமக்கும் ரோஹிங்யப் பெண்களுக்கு முகாம்களில் மிகச் சொற்பமான தெரிவுகளே உள்ளன. உடலுறவில் ஈடுபட்டதன் பின்னர் ஐந்து நாட்கள் வரையான அவசர கருத்தடையினையும் 12 வாரங்களுக்கு முன்னதான கருக்கலைப்பினையும் சிகிச்சை நிலையங்கள் வழங்குகின்றன.
பெரும்பாலான பெண்கள் இவ்வாறான சிகிச்சை நிலையங்களுக்கு வருவதில்லை, அவ்வாறு வருபவர்கள் காலம் பிந்திய பின்னரே வருகின்றனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் குறித்த பெண்ணின் குடும்பத்தினரே சுயமாக சில கருக்கலைப்பு வழிமுறைகளைக் கையாள்கின்றனர். இதனால் உயிராபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
மகப்பேற்றுத் தாதியான அக்தர் ஒரு நோயாளியின் சம்பவத்தை நினைவுகூருகின்றார். குறித்த பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து வந்து அவருக்கு வயிற்று வலி எனத் தெரிவித்தனர். அப்பெண் திருமணமாவர் எனவும் அக்தரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அப் பெண்ணைப் பரீட்சித்துப்பார்த்தபோது அப்பெண்ணின் கர்ப்பப்பையினுள் உடைந்த குச்சியொன்று இருப்பதைக் கண்டறிந்தார். இரண்டு நாட்களின் பின்னர் அப்பெண் உயிரிழந்தார்.
பின்னர் அப் பெண்ணின் குடும்பத்தினர் அவர் திருமணமாகாதவர் எனவும் அவர் பாலியல் வன்புணர்வுக்கு இலக்கானவர் எனவும், அவரைக் காப்பாற்றுவதற்காக உள்ளூர் பெண்ணொருவருக்கு பணம் செலுத்தி கருக்கலைப்பு செய்ய முயன்றதாகவும் தெரிவித்ததாக அக்தர் குறிப்பிட்டார்.
மருத்துவச் சிக்கல்களுக்கு மேலதிகமாக பாலியல் வன்புணர்வுக்கு இலக்காகி கருவுற்றிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் எண்ணிலடங்காத வேறு பல ஆபத்துக்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
திருமணமாகாத ஒருவராக இருந்து பாலியல் வன்புணர்வுக்கும் இலக்காகியிருந்தால் சமூக அங்கீகாரம் என்ற வகையில் அப் பெண்ணின் எதிர்காலம் சூனியமாகிவிடுகின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்காக முகவர் நிலையத்தின் பெண் பேச்சாளர் கரோலின் கிளக் தெரிவித்தார்.
இதன் காரணமாக, பல குடும்பங்கள் திருமணமாகாத பாலியல் வன்புணர்வுக்கு இலக்காகி கருவுற்றிருக்கும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அவசர அவசரமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்கின்றனர். இதனால் சிறுவயதுத் திருமணங்கள் முகாம்களில் அதிகரித்துள்ளதாக சேவ் த சில்ரன் அமைப்பும் யுனிசெப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையினைத் தவிர்ப்பதற்கு உதவிக் குழுக்கள் முகாம்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. பாலியல் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண்பதற்காக அவர்கள் இலகுவாக முன்னிலையாவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பங்களால் ஒதுக்கப்பட்டுள்ள, வன்முறைகளுக்குள்ளாகும் சாத்தியமுள்ள அல்லது தனிமைப்படுத்தப்படும் சாத்தியமுள்ள பாலியல் வன்புணர்வுக்கு இலக்காகி கருவுற்றிருக்கும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் அங்கு தமது மகப்பேறு முடிவடையும் வரை தங்கியிருக்க முடியும்.
அத்தோடு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முற்றுப்பெற்று விடுவ தில்லை. `அவர்கள் மிகவும் முக்கியமாக உளவள ஆதரவு அவசியமான பெண்களாவர்' எனத் தெரிவிக்கும் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் உளவியல் நிபுணரான அல்லிசன் பொக் `அவர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்' எனவும் தெரிவித்தார்.
Vidivelli
No comments:
Post a Comment