வடக்கு, கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளுக்கிடையிலான கல்முனை RDHS சவால் கிண்ணம் - 2018 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை RDHS அணியினர் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவாகினர்.
கல்முனை RDHS சவால் கிண்ணம் - 2018 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி (31) கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அணிகள் மோதிக்கொண்டன.
மேற்படி போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை RDHS அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண RDHS அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் 54 ஓட்டங்களைப் பெற்றனர்.
55ஓட்டங்களை வெற்றி இலக்காக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை RDHS அணியினர் 9.4 ஓவர்களில் 9விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்து சம்பியனாகினர்.
வெற்றிபெற்ற கல்முனை அணியினருக்கான வெற்றிக் கேடயம் மற்றும் பணப்பரிசில்களை பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுணர் ரோஹித போகொல்லாகம வழங்கிவைத்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த வவுணியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அணிகள் பங்கு கொண்டன.
இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், ஆகியோரும் இதன்போது கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment