கல்வியமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவு மூன்றாவது முறையாக நடத்தும் அகில இலங்கை பாடசாலைகள் மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகள் நாளை கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஆரோக்கியமான வீரர்களை உருவாக்குவதே இந்த சிறுவர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளின் முக்கிய குறிக்கோளாக கருதப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த சம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது மற்றும் நான்காவது தர மாணவர்களுக்கிடையிலான போட்டி நாளையும் நாளை மறுதினமும் கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் நடைபெறவுளவுள்ளது. அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட முன்னோட்டப் போட்டிகளில் தேர்ச்சிபெற்று வீர, வீராங்கனைகள் நாளை ஆரம்பமாகவுள்ள இறுதிச் சுற்றில் விளையாடுகின்றனர்.
இப்போட்டிகள் அனைத்தும் அணி விளையாட்டுக்களாகவே விளையாடப்படுகின்றன. அதேவேளை போட்டித் தன்மையை ஊக்குவிக்காது பங்குபற்றுதலை மாத்திரமே கல்வித்துறை அமைச்சு ஊக்குவிக்கிறது.
காரணம் போட்டித் தன்மை அதிகரித்தால் மாணவர்கள் அதற்காக தங்களை வருத்திக் கொள்வர். ஆனால் எமக்குத் தேவை மாணவர்கள் எதிர்காலத்தில் தேசிய அணிக்கு விளையாடச் செல்லும்போது, அவர்களை இந்த வயதிலேயே அதற்கேற்ப உருவாக்குவது மட்டுமே என்று கல்வியமைச்சின் ஆலோசகர் சுனில் ஜயவீர தெரிவித்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் நெஸ்லே நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.
No comments:
Post a Comment