அம்பாறை மாவட்டத்தில் இன ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகவும், தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி பணிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அனைத்து அபிவிருத்தி பணிகளும் முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமே நடைபெறுகின்றதாகவும், அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வரனின் குற்றச்சாட்டுடனான உரையினை அடுத்து பிரதி அமைச்சர் பைசல் காசீம் அவர்கள் அதற்கான விளக்கத்தினை வழங்க முற்பட்டபோது இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றது.
அதில், நிந்தவூரில் ஏற்கனவே ஒரு வைத்தியசாலை இருக்கும்போது சுமார் ஐநூறு மில்லியன் ரூபாய் செலவில் இன்னுமொரு வைத்தியசாலையை ஏன் உருவாக்க வேண்டும் என்று இனவாதத்தினை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் எந்த விதமான அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று அடிக்கடி முகநூல் வாயிலாக எமது சகோதரர்கள் சிலர் விமர்சித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
ஆனால் ஒரு பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினரான திரு. கோடீஸ்வரன் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தமிழ் பிரதேசங்களை புறக்கணித்துவிட்டு முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமே அனைத்து அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்கின்றார்கள் என்று புள்ளி விபரங்களுடன் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இங்கே ஆதாரபூர்வமாக கூறப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை மறுப்பதா? அல்லது முகநூல்வாயிலாக அரசியல் காழ்புணர்ச்சியோடு விமர்சிக்கின்ற எமது சில சகோதரர்களின் கருத்தினை ஏற்றுக்கொள்வதா ?
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கருத்துக்களும் உண்மையாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று பொய்யாக இருக்கவேண்டும். எனவே ஆதாரத்தோடும் ஒரு பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் கோடீஸ்வரன் அய்யாவின் பாராளுமன்ற உரையானது மறுக்க முடியாத உண்மையாகும்.
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது
No comments:
Post a Comment