மக்களிடையே அதிர்ச்சியை கிளப்பிய சிங்கம் : 'இதோ வந்துட்டேன்' : மூன்று நாட்களுக்கு பிறகு கூண்டுக்கு திரும்பியது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 7, 2025

மக்களிடையே அதிர்ச்சியை கிளப்பிய சிங்கம் : 'இதோ வந்துட்டேன்' : மூன்று நாட்களுக்கு பிறகு கூண்டுக்கு திரும்பியது

3 நாட்களுக்குப் பிறகு ஷெரியார் சிங்கம் அது உணவு உண்டு தங்குமிடத்திற்கு வந்துவிட்டதாக நேற்று (06) வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டின் மிகப்பெரிய பழமையான பூங்காவாகும். 

இந்த பூங்காவில் சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் நவீன வசதிகளுடன் சுமார் 180 வகையான 2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் உலாவும் இடமான லயன் சபாரி 25 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வையாளர்கள் பிரத்யேக வாகனத்தில் சென்று சிங்கங்கள் உலாவதை அருகில் கண்டு இரசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், லயன் சபாரியில் சங்கர், ஜெயா, புவனா உள்ளிட்ட மூன்று பெண் மற்றும் நான்கு ஆண் என ஏழு சிங்கங்கள் உள்ளன. இதில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சங்கர் என்ற சிங்கத்திற்கு வயதானதால், புதிதாக பெங்களூரு பன்னேரஹட்டா உயிரினப் பூங்காவிலிருந்து ஷெரியார் என்ற 5 வயது சிங்கம் விலங்கு பரிமாற்றத்தின் மூலம் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து ஷெரியார் சிங்கத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரி இடத்தில் விட்டு பழக்கப்படுத்தி வந்தனர். அந்த சிங்கம் தினந்தோறும் சிங்கங்கள் உலாவிடத்திலிருந்து உணவு அளிக்கும் இடத்திற்கு தானாக வந்துவிடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி முதல் ஷெரியார் சிங்கம் தங்குமிடத்திற்கு வராமலும், உலாவிடத்தில் இருந்தும் மாயமானது.

இது குறித்து சிங்கங்களுக்கு உணவளிக்கும் ஊழியர்கள் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து ஷெரியார் சிங்கத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். 

இந்த சம்பவம் வண்டலூரை சுற்றியுள்ள பகுதி மக்களிடையே அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், மாயமான சிங்கம் உலாவிடத்தை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு சுற்றுச் சுவர்கள், உள் கம்பிகள், இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால் யாரும் அச்சம் அடையத் தேவையில்லை என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பூங்காவில் லயன் சபாரிக்கும் தடை விதிக்கப்பட்டது.

மேலும் அதிகாரிகள் தொடர்ந்து ட்ரோன் கெமரா மூலம் சிங்கத்தை லயன் சபாரி முழுவதுமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த சிங்கம் லயன் சபாரி அமைந்துள்ள 25 ஏக்கர் காட்டுப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பூங்கா அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

மேலும் ஷெரியார் சிங்கத்தின் காலடி தடயங்கள் லயன் சபாரி எல்லைக்குள் பதிவாகி இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். 

முன்னதாக, வனத்துறை சார்பில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, சிங்கம் கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க 10 கெமராக்களும் நிறுவப்பட்டன. இரவிலும் சிங்கத்தை காணும் வகையில் பிரத்யேக ட்ரோன் கேமராக்கள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 03 நாட்களுக்குப் பிறகு ஷெரியார் சிங்கம் அது உணவு உண்டு தங்குமிடத்திற்கு வந்துவிட்டதாக நேற்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சிங்கம் அதன் தங்குமிடத்திற்கு ஓடிவரும் வீடியோ காட்சிகளையும் பூங்கா நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment