பதவி உயர்வுகள் வழங்கும்போது நீதி­ப­தி­க­ளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்­ளதா? : தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 25, 2025

பதவி உயர்வுகள் வழங்கும்போது நீதி­ப­தி­க­ளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்­ளதா? : தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

(எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கம்போது சிரேஷ்டத்துவத்தின் பிரகாரமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்த முறைமை மாற்றப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் முறை பின்பற்றப்படுவதால், சிரேஷ்ட நீதிபதிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் நீதிபதிகளுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதா என தேடிப்பார்க்க தெரிவுக்குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற தண்டனை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மேல் நீதிமன்றங்களுக்கு 16 நீதிபதிகள் பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நீதிமன்ற ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேர்முகப் பரீட்சை நடத்த நீதிமன்ற ஆணைக்குழுவினால் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டு உறுப்பினர்களே இந்த நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளனர். 3ஆவது உறுப்பினரை நியமிக்காமல் ஏன் இந்த நேர்முகப் பரீட்சையை நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நேர்முகப் பரீட்சை இடம்பெற்ற பின்னரே 3ஆவது உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பதவி உயர்வு வழங்கும் பெயர் பட்டியலில் 252 பேரின் பெயர்கள் உள்ளன. அதில் ஆரம்ப நிலையில் இருக்கும் 35 பேரில் இருந்தே 16 பேர் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த பட்டியலில் முதல் 3 நிலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு இல்லை. அவர்கள் நீதிச்சேவையில் பல வருடங்கள் அனுபவமுள்ளவர்கள். அதேநேரம் பட்டியலில் 33ஆவது இடத்தில் இருப்பவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்தான் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய உத்திரவிட்ட நீதிபதி. இது எவ்வாறு சாத்தியமாகும்.

அதேபோன்று நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கும் போதும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சிரேஷ்டத்துவத்தின் பிரகாரம் இடமாற்றம் வழங்கப்படவில்லை. கொழும்பில் இருக்கும் நீதிமன்றங்களுக்கு சிரேஷ்ட நிலையில் இருக்கும் நீதிபதிகளே இடமாற்றம் வழங்கப்படும்.

ஆனால் நீதிச்சேவை ஆணைக்குழுவின் இடமாற்ற பட்டியலில் 106 பேரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதில் பட்டியலில் பின் வரிசையில் இருக்கும் சிலர் சிரேஷ்ட நீதிபதிகளை பின்தள்ளிவிட்டு, இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் நீதிபதிகளுக்கு எந்த அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன என்ற விடயம் தொடர்பில் கேள்வி எழுகிறது. அதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது.

அதனால் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் வழங்க புள்ளி அடிப்படையை தெரிவு செய்திருப்பது, அவர்களுக்கு தேவையான நீதிபதிகளை அவர்களுக்கு தேவையான நீதிமன்றங்களுக்கு நியமித்துக்கொள்ளவா என்ற சந்தேகம் எழுகிறது.

அதேநேரம் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் வழங்கும் விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளுக்கு அது தொடர்பில் முறையிட ஒரு இடமில்லை. அதனால் இந்த விடயத்தில் நீதிபதிகள் யாருக்காவது அநீதி ஏற்பட்டுள்ளதா என தேடிப்பார்க்க தெரிவுக்குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் அடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment