ஐஸ் போதைப் பொருள்காரர்களும், பிணைமுறி மோசடியாளர்களும் ஒன்றிணைவு : நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்? - கடுமையாக சாடிய பிமல் ரத்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 9, 2025

ஐஸ் போதைப் பொருள்காரர்களும், பிணைமுறி மோசடியாளர்களும் ஒன்றிணைவு : நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்? - கடுமையாக சாடிய பிமல் ரத்நாயக்க

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்தான் ஐஸ் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வந்து தூய்மைப்படுத்துகிறார். ஆம் நாங்கள் போதைப் பொருள் கொண்டு வந்தோம். அரசாங்கம் ஏன் அதை பிடிக்கவில்லை என்பதே இவர்களின் தர்க்கமாகும். நாமல் ராஜபக்ஷ 2029 இல் ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார். ஐஸ் போதைப் பொருள்காரர்களும், பிணைமுறி மோசடியாளர்களும் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள். இது வெட்கக்கேடானது என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த நாட்டில் போதைப் பொருள் கலாசாரத்தை உருவாக்கி போதைப் பொருள் வியாபாரிகளையும், பாதாள குழுக்களையும் பாதுகாத்தவர்கள் கலக்கமடைந்து பாராளுமன்றத்துக்குள் இருந்துகொண்டு தம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்தான் ஐஸ் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த கட்சியின் உறுப்பினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். கைது செய்யப்பட்டவர் அவரது அரசியல் கட்சியின் உறுப்பினர் என்று அவருக்கு நினைவுப்படுத்திக் கொள்கிறோம்.

நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார். ஐஸ்லாந்து இந்த விடயத்தை அறிந்தால் இலங்கையை விமர்சிக்கும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஒன்றிணைந்துள்ளார்கள். ஐஸ்காரர்களும், பிணைமுறி மோசடியாளர்களும் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள். என்றே குறிப்பிட வேண்டும். இவ்விரு தரப்பினரும் அண்மையில் திருப்பதிக்கு சென்றுள்ளார்கள்.

ஆம் நாங்கள் ஐஸ் போதைப் பொருள் கொண்டு வந்தோம். அரசாங்கம் ஏன் அதனை பிடிக்கவில்லை என்பதே நாமல் ராஜபக்ஷவின் தர்க்கமாகும். துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப் பொருள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராய வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் 323 கொள்கலன்கள் விடுவிப்புக்கும், இந்த இரு ஐஸ் போதைப் பொருள் கொள்கலன்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக குறிப்பிடுகிறார். முதலில் இவர் பதவிக்கு ஏற்றாப்போல் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . சட்ட நடவடிக்கை எடுக்கும்போது திணறமாட்டோம் என்று குறிப்பிட்டவர்கள் இன்று பாராளுமன்றத்தில் திணறுகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment