வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட 12 இலங்கையர்கள் : உறவினர்களிடம் தூதரகம் விடுத்துள்ள கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 27, 2025

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட 12 இலங்கையர்கள் : உறவினர்களிடம் தூதரகம் விடுத்துள்ள கோரிக்கை

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக அனுப்பும்போது அவர்களது உடல்நிலை தொடர்பில் உறவினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ள சிலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்டதை அடுத்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து அண்மையில் சுமார் 12 இலங்கையர்கள் மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப் பொருள் பாவனை பிரச்சினைகள் காரணமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மனநலப் பிரச்சினைகள் மற்றும் போதைப் பொருள் பாவனை உள்ளவர்களை வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதை தவிர்க்குமாறு தொடர்புடைய குடும்பங்களை இலங்கைத் தூதரகம் வலியுறுத்துவதாகவும் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலில் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டிருந்த மற்றும் பொருத்தமற்ற நடத்தையை வெளிப்படுத்திய மேலும் இரு இலங்கையர்கள், கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தூதுவர் நிமல் பண்டார, அந்த இரண்டு இலங்கையர்களும் டுபாய் வழியாக நாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரிலேயே நாடு கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவர் போதைப் பொருள் பாவனை காரணமாக வேலைக்குச் செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்ததாகவும், இரண்டாவது நபர் மன அழுத்தத்தால் தனது பணியிடத்திலிருந்து தப்பி ஓடி, வேலை இல்லாமல் அலைந்து திரிந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

இவ்விருவரும் இஸ்ரேலில் உள்ள இலங்கை சமூகத்தின் உறுப்பினர்களால் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இருவரது கடவுச்சீட்டுக்களும் தொலைந்து போனதால், தூதரகம் இலவசமாக இரண்டு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்கியதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

அவர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தபோது அவர்களின் நலனைத் தூதரகம் உறுதி செய்ததாகவும், அவர்கள் புறப்படுவதற்காக விமான நிலையம் வரை அவர்களுடன் சென்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment